“எங்களுக்கு எங்கட காணிவேணும்.”
‘சொந்த காணியில பயிர்செய்தனாங்கள் இப்ப கூலிக்கு போறம்’
எங்கட காணிய எங்களிட்ட தந்தா போதும். நாங்க அத வைச்சு வாழ்ந்து பிழைச்சிக்குவம். இதைப் போல 69 குடும்பங்களுக்கும் நியாயம் கிடைக்கனும். அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் கிராமத்தில் இன்னும் இராணுவத்தினரின் பிரசன்னம் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், இக்கிராம மக்களின் காணிகளை விடுவிப்பதுதொடர்பிலோ அல்லது அவர்களது கோரிக்கைகளுக்கு ஏற்ப மாற்றுக்காணிகளை வழங்குவது தொடர்பிலோ ஆராய்ந்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் […]
எங்கட காணிய எங்களிட்ட தந்தா போதும்.
நாங்க அத வைச்சு வாழ்ந்து பிழைச்சிக்குவம்.
இதைப் போல 69 குடும்பங்களுக்கும் நியாயம் கிடைக்கனும்.
அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் கிராமத்தில் இன்னும் இராணுவத்தினரின் பிரசன்னம் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், இக்கிராம மக்களின் காணிகளை விடுவிப்பதுதொடர்பிலோ அல்லது அவர்களது கோரிக்கைகளுக்கு ஏற்ப மாற்றுக்காணிகளை வழங்குவது தொடர்பிலோ ஆராய்ந்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டது. கடந்த (செப்ரெம்பர் 2016) 27ஆம் திகதி உயர்நீதிமன்றில் எடுக்கப்பட்ட இவ்வழக்கு ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கை தாக்கல் செய்தது அஷ்ரப் நகர் கிராமத்தைச் சேர்ந்த கதீஜா உம்மா என்ற 50 வயதுப்பெண். உள்நாட்டு மோதல் காலப் பகுதியில் பல்வேறு காலகட்டங்களிலும் இடம்பெயர்ந்த இந்த கிராம மக்கள், இருப்பதற்கு வந்தபோது யானைகளாலும் தாக்கப்பட்டனர். மேலும், போரின் பின்னர் இராணுவத்தின் பிரசன்னத்தால் காணிகளை விட்டு வெளியேறவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாக கூறுகின்றனர். இந்த மக்களுக்காக கதீஜா உம்மா என்ற இந்தப்பெண்தனது காணி தனக்கு தரப்படவேண்டும் என வழக்கு தாக்கல்செய்தார். இதுபற்றிய விபரத்தை அவரிடமே கேட்போம்.
கேள்வி எவ்வளவு காலமாக அஷ்ரப் நகரில் நீங்க வாழ்ந்தீங்கள்?
பதில் எனக்குப் புத்தி தெரிஞ்ச நாள் முதலா அங்கதான் இருக்கோம். எங்க வாப்பாவுக்கு 6 பொம்புளைப் புள்ளையும் 5 ஆம்புளையும். 2 ஏக்கர் காணி சீதனம் தந்திருந்தார். இந்தக் காணி என்ட வாப்பாட வாப்பா வாழ்ந்த காணி.1952 இல வந்ததாக சொல்லிறாங்க. நாங்க சின்ன வயசுல இருந்தே அந்தக் காணியிலதான் வாழ்ந்த. என்ட கலியாணம் 81 ஆம் ஆண்டு இதே இடத்திலதான் நடந்த. எங்களுக்கு பிள்ளயும் புறந்து இப்ப மூத்த மகனுக்கு 33 வயசாகுது.
நானும் என்ட சகோதரங்கள் எல்லாம் மொத்தம் 9 பேரு. எங்க எல்லாருக்கும் எங்கட உம்மா வாப்பா இதே இடத்துலதான் காணி தந்த. எங்கட குடும்பம் சொந்தக் காரங்க எல்லாரும் இந்தக் காணியிலதான் வாழ்ந்த.
1983 காலப் பகுதியில் ஏற்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக நாங்க அகதி முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் இருந்தம். மீதமாக இருந்தோர் பள்ளிவாசலை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.
1990களில் சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் 16 பேர் இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மீதமிருந்த மக்களும் அச்சம் காரணமாக வெளியேறினம்.
1996ஆம் ஆண்டுகளில் மீண்டும் மீள் குடியேறத் தொடங்கினோம். எனினும் அரச வன இலாகா திணைக்களத்தினர் மற்றும் காட்டு யானைகளின் தொந்தரவுகள் இருந்துது. பெரும் இன்னல்களுக்கு மத்தியிலேயே புனரமைப்பு வேலைகளை செய்தம்.
நாங்க சோளம், பயிற்றை, கச்சான், நெல்லு விதைப்போம். பெண்கள் கைத்தொழில் செய்வம். பாய், பெட்டி இழைக்கிறது. தட்டு செய்வது, தறி, பன்பாய் இழைக்கிறது. அதோடை கோழி, ஆடு, மாடு வளர்க்கிறது என தொழில் நிறைய இருந்திச்சு. இப்ப ஒண்டும் இல்லை. ஆம்பிளைகள் கூலித் தொழில் செய்யறது.
கேள்வி உங்கட கிராமத்தில இருந்து நீங்கள் வெளியேற்றப்பட்டீர்களா?
பதில் ஓம். 2011.11.05 இல இராணுவமும், வனவிலங்குப் பாதுகாப்புப் பிரிவினரும் வந்தாங்க. முதலில தற்காலிகமாக எண்டு வந்தார்கள். எங்களை எழும்பச் சொல்லலை. பிறகு கொஞ்ச நாளைல ஒரு வீட்டுக்கு 2 பேர் வீதம் சோதனைச் சாவடி போட்டார்கள். ஆமிப் பயத்தால் குமர் பிள்ளைகளை வச்சிருக்க ஏலாமல் வெளியாலை தங்க வச்சிட்டு வயசான நாங்கள் மட்டும் வீட்டில இருந்தம்.
சொந்தக்காரர்கள் உள்ள வர ஏலாது. வெளி ஊருக்குப் போய் வாறவங்க ஆமி வச்சிருக்கிற பெயர் விபரத்தில் பெயர் இருந்தால் மட்டுமே உள்ள வரலாம். கையெழுத்து வாங்குவார்கள்.
வெளியில இருந்து உள்ள நெல் கொண்டு வர முடியாது. தோட்டம் செய்ய முடியாது விவசாயத்தை அழித்தார்கள். பசளை போட முடியாது. சைக்கிள் மோட்டார் சைக்கிள் உள்ள கொண்டு வர முடியாது.
ஆமி எங்கட ஏரியாக்குள வந்ததில இருந்து எங்களுக்கு கஷ்டம்தான்… இருக்க இடமில்லாம அங்கயும் இங்கயுமா அலைஞ்சு திரியுறம்…
ஆமி வந்து இன்டைக்கு 5 வருசமாகுது. ஆமி எங்கட வளவுக்குள்ள பயிர் செய்து யாவாரம் பண்ணி அதால வார வருமானத்துல சாப்பிட்டுட்டு இருக்காங்க… வாழை..மரவள்ளி, வெண்டி என்டு பயிர் செய்து விக்கிறாங்க… அது மட்டுமில்லாம இப்ப அந்த பூமியில கிறவல் மண் தோண்டி அதையும் வித்து காசாக்குறாங்க.. எங்கட நிலத்துல வந்து லொறி லொறியா கிறவல் ஏற்றி வித்துக்கிட்டிருக்காங்க…
2011இல கிரீஸ் பூதம் பிரச்சினை வந்த நேரத்துலயும் அவங்களால பெரிய கஷ்டங்கள நாங்க சந்திச்சம். குமருப் புள்ளைகள வேற இடத்துல கொண்டு போய் பாதுகாக்க வேண்டி வந்துச்சு. அதனாலதான் ஆமி கேம்புக்கு வெளியால ஒரு இடத்துல சுனாமி வீட்டுத் திட்டத்துல இருக்குற வீடு ஒன்றுல இருக்கம்.
நாங்க வன்செயல் காலத்துல கடும் பிரச்சினைகளை சந்திச்சு கஷ்டங்களுக்கு மத்தியிலதான் வாழ்ந்த. அப்பயெல்லாம் வந்து எங்களுக்கு பாதுகாப்பு தராத ஆமி யுத்தம் முடிஞ்சு எத்தனையோவருசத்துக்குப் புறகு அங்க வந்தது எதற்காக?
கேள்வி இப்ப எங்க நீங்கள் இருக்கிறீங்கள்?
பதில் ராணுவ கெடுபிடிக்குள்ளயும் கொஞ்ச நாளா பல்லக் கடிச்சிக்கிட்டு அதிலேயே வாழ்ந்தம். பிறகு எங்கட வீட்ட அவங்க இடிச்சிப் போட்டாங்க. அதால எங்கட காணிக்கு கொஞ்சம் தள்ளி ஒரு இடத்துல குடியிருந்தம். இப்படி இருக்கும் போது போன வருசம் ஒக்டோபர் மாசம் ஒரு இரவுல 7 மணியிருக்கும். நான் கிணத்தடியில குளிச்சிட்டு வரும் போது அங்க நிண்ட ஒரு யானை என்ன அடிச்சி தலையில 32 தையல் போடுற அளவுக்கு காயம். என்ட உசுரு போயிட்டு என்டுதான் நினைச்சன்… ஏதோ அல்லாஹ் காப்பாத்திட்டான்.
யானை அடிச்சத்துக்குப் புறகு பள்ளிவாசல் நிர்வாகிகள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு தற்காலிகமா ஒரு வீட்ட ஏற்பாடு செய்து தந்தாங்க. அதிலதான் நாங்க இப்ப இருக்கம்.
கேள்வி இந்தப் பிரச்சினைய எதிர்த்து நீங்க மட்டும்தான் வழக்கு தொடர்ந்தீங்களா? இந்த வழக்கின் மூலம் என்ன எதிர்பாக்கிறீங்க?
பதில் மொத்தம் நாங்க 69 குடும்பம். நானும் இன்னொருவரும் சேர்ந்துதான் வழக்குப் போட்டம்.. அக்கரைப்பற்று கோர்ட்லயும் ஒரு வழக்கு இருக்கு…பிறகு பெண்கள் செயற்பாட்டு வலையமைப்புட உதவி ஒத்தாசைல கொழும்புக்கு வந்து உயர் நீதிமன்றத்துல வழக்குப் போட்டாம்… இதன் மூலம்தான் எங்களுக்கு ஒரு நீதி கிடைக்கும் என்டு நம்புறம்.
இப்ப இருக்குற தற்காலிக வீட்ட சொந்தமா தாரம்…அந்த வீட்ட பாரம் எடுக்கிறீங்களா என்டு அரசாங்க சட்டத்தரணி கேட்டாரு. நாங்க அதுக்கு ஏலாது என்டு சொல்லிட்டம். எங்கட பூர்வீக காணி மொத்தம் 2.25 ரூட் அளவு கொண்டது.
அத எங்களுக்கு தராம கரண்டும் இல்லாத தண்ணியும் இல்லாத ஒரு வீட்ட மட்டும் தாரது நியாயமில்ல.வாழ்வாதாரத்துக்கு பயிர்செய்யிறது எப்புடி?
எங்கட காணிய எங்களிட்ட தந்தா போதும். நாங்க அத வைச்சு வாழ்ந்து பிழைச்சிக்குவம். இதைப் போல 69 குடும்பங்களுக்கும் நியாயம் கிடைக்கனும்.
கேள்வி இப்ப உங்கட காணியில யார் இருக்கிறது?
பதில் ஆமி , முதல் நிறையப் பேரு இருந்த. இப்ப 9,10 பேர்தான்…கொஞ்சப் பேருதான் இருக்காங்க. அவங்க பயிர் செஞ்சிக்கிட்டு கிறவல் மணல அள்ளி வித்திக்கிட்டுத்தான் அதுக்குள்ள இருக்காக..
இப்ப கொஞ்ச நாளா வன இலாகா திணைக்கத்தால காணியெல்லாம் அளக்காங்க.. அதில தேக்க மரம் மா மரம் உண்டாக்கப் போறாங்க எண்டு சொல்றாங்க… காணிய பிரிச்சு சிங்கள மக்களுக்கு குடுக்கப்போறாக எண்டும் சொல்லுறாக.. இதுக்கு நாங்க அனுமதிக்க ஏலாது. அது எங்கட காணி. பூர்வீக காணி.