உயிர் வாழ்வதற்காக நீரில் குதிக்கும் பெண்.
உயிர் பிழைத்திருக்க வேண்டுமாயின் மாற்றமடையும் நிலைமைகளுக்கேற்பத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லது செத்து மடியநேரும் எனச் சொல்லப்படுகிறது. இந்தக் கோட்பாடு உயிர் வாழ் இனங்கள் எல்லாவற்றிற்கும் ஏற்புடையதாகும். புதிய சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்ப தன்னைச் சரிசெய்து கொள்வதற்கு ஒருவர் மனோபலம் மிக்கவராக இருத்தல் வேண்டும். இதில் வரும் பெண் பாத்திரத்தின் கதையும் அப்படியான ஒன்றாகும். அவளுடைய கிராமத்தின் அருகாக ஓடிக்கொண்டிருக்கும் முக்குணு ஓயா என்னும் சிற்றாறின் அடிமட்டத்திலிருந்து மணல் சேகரிக்கிறாள். அதில் கிடைக்கும் நாளாந்த சம்பாத்தியத்தைக் […]
உயிர் பிழைத்திருக்க வேண்டுமாயின் மாற்றமடையும் நிலைமைகளுக்கேற்பத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லது செத்து மடியநேரும் எனச் சொல்லப்படுகிறது. இந்தக் கோட்பாடு உயிர் வாழ் இனங்கள் எல்லாவற்றிற்கும் ஏற்புடையதாகும். புதிய சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்ப தன்னைச் சரிசெய்து கொள்வதற்கு ஒருவர் மனோபலம் மிக்கவராக இருத்தல் வேண்டும்.
இதில் வரும் பெண் பாத்திரத்தின் கதையும் அப்படியான ஒன்றாகும். அவளுடைய கிராமத்தின் அருகாக ஓடிக்கொண்டிருக்கும் முக்குணு ஓயா என்னும் சிற்றாறின் அடிமட்டத்திலிருந்து மணல் சேகரிக்கிறாள். அதில் கிடைக்கும் நாளாந்த சம்பாத்தியத்தைக் கொண்டு தேவைக்கேற்ப முழுமையாகக் கிடைக்காத சில உணவுப் பண்டங்களுடன் தனக்கும் தனது இரு சிறார்களுக்கும் ஊட்டம் அளிக்கிறாள். அத்துடன் பிள்ளைகளின் கல்விக்கும் செலவிடுகிறாள்.
ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகள் ஓடைகளிலிருந்து மணலை வாரியெடுப்பது மரபுரீதியாகத் திடகாத்திரமான ஆண்களே செய்யமுடியுமென நம்பப்படுகிறது. மிகக் கூடுதலான மன உறுதி இருந்தால் மட்டுமெ ஒரு பெண் இந்த வகையில் உழைத்துச் சம்பாதிக்க முடியும். அதனாற்தான் இங்கே‘பத்மா’ ஒரு விசேட கதாபாத்திரமானாள்.
கெபற்ரிகொல்லாவைக்கு அருகில் இருக்கும் யக்கவேவா என்ற ஒரு சிறு கிராமத்திலே காட்டுப்பகுதியைச் சார்ந்த ஒரு சிதிலமடைந்த குடிசையிலேயே இவள் வாழ்கை நடத்துகிறாள்.
யானைப் பாதை வழியாக யக்கவேவா
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைக் கடுமையாகப் பாதித்த கொடூர யுத்தத்தின் போது கெபற்ரிகொல்லாவை பிரபலம் பெற்ற ஒரு கிராமம். யுத்த காலத்தில் அது ஒரு இருண்ட இடமானதுடன் அயல் கிராமங்களில் வாழ்ந்த மக்களினால் பிரதான நகரமாகக் கருதப்பட்டது. அங்கிருந்து வவுனியா செல்லும் பிரதான வீதியில் ஒரு முச்சந்தியுள்ளது. அந்த முச்சந்தியில்ஹ ல்மில்லாவெற்ரிய கிராமம் வரை வலது பக்க திசையிற் சென்றபோது, அப்பகுதியில் யானைகள் வெகு சாதாரணமாக நிற்பதைக் காணக்கூடியதாக இருந்தது. இருட்டியதும் இந்தக் கிராம மக்கள் தங்கள் வதிவிடங்களுக்குள்ளே கட்டுப்பட்டு இருக்கிறார்கள். எப்போதாவது வரும் இரண்டு அல்லது மூன்று இலங்கை போக்குவரத்துசபை பேரூந்துகளை விட ஒரு சில உந்துருளிகளும்பல டிமோ லொறிகளும் அந்தச் சாலையில் பயணிப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.
அந்தப் பெண்ணின் கிராமத்திற்குச் செல்வதற்கு, சரளைக் கற்களாலான குன்றும் குழியுமாக இருந்த வீதியில் 7 கிமீ சென்று முக்குணு ஓயா(ஒரு சிற்றாறு) ஆற்றைக்கடந்து யக்கவேவா கிராமத்திற்கு செல்ல முடிந்தது. கெபற்ரிகொல்லாவையில் 2007இல் நடந்த பேரூந்து குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலோனோர் இந்தக் கிராமவாசிகளே.
பத்மாவின் ஏழ்மை நிறைந்த வீடு யக்கவேவா சிறு கிராமமுடிவில் இந்திகஹாபொத்தானை கிராமத்திற்கு அடுத்தாற்போல் கட்டப்பட்டுள்ளது. செனிவரத்னாகே பத்மாவும் அவளுடைய மகனும் மகளும் இந்த வீட்டில் வசிக்கிறார்கள். அவளுடைய வீட்டிற்கு அப்பால் யானைகளுக்கும் ஏனைய விலங்குகளுக்கும் ஆறுதல் கொடுக்கும் இராட்சத காடு உள்ளது. பத்மாவிற்குச் சொந்தமாக இருந்;தவை, அவளுடைய சிறிய வீடு, இரண்டோ மூன்று பிளாஸ்டிக் கதிரைகள் மற்றும் கரிய மண்பானைகளுடன் வெளிறிப்போன ஆடைகள் மட்டுமே.
தனது குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக முக்குணு ஓயாவின் தண்ணீருக்கடியில் மணல் வாரியெடுப்பதற்காக பத்மா நீரில் குதித்துப் போராடுகிறாள். ஓவ்வொரு முறையும் நீரில் குதிக்கும் போதும் அவள் புதிதாக எதையாவது காணக்கூடும் என நம்புகிறாள். இந்த வேலை கடினமானதாய்; இருப்பினும் அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தனது குழந்தைகளும் தானும் உயிர் வாழக்கூடியதாயிருக்கிறது. ஆதனால் அவளுக்கு அது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. அவள் அவ்வாறே நினைத்திருக்கவும் கூடும்.
முக்குணு ஓயா அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் சுற்றுவட்டத்தில் பார்வைக்கு எட்டிய தூரத்தில் மனித சீவன் ஒன்றைக்கூடக் காணமுடியவில்லை. பெரிய கூடையைக் கையிற் பிடித்துக்கொண்டு பத்மா ஒரு மீனைப் போல தண்ணீருக்குள் தாவுகிறாள். அதில் மணலைச் சேகரித்துக்கொண்டு நீரிற்கு மேலே வந்து சிற்றாற்றின் கரையில் குவிக்கிறாள்.
வெளியேவரும் ஒவ்வொரு கணத்திலும் அவளுடைய கண்கள் மணற்குவியல்மேல் சந்தோஷமாயிருக்கும் அவளது மகள்மேல்தான் பதிந்திருக்கும். பல வருடங்களாக இதுவே அவளுடைய தினசரி நடைமுறையாகும்.
ஒரு உழவு இயந்திரத்தை நிரப்புவதற்கு தேவையான மணலைச் சேகரிப்பதற்காக பத்மா நாளாந்தம் நூற்றுக்கு மேற்பட்ட தடவை நீருக்குள் குதிக்கவேண்டியுள்ளது. இலகுவில் மணல் வாருவதற்கு உரிய இடங்களில் சிலவற்றை ஆண்கள் தமக்காக ஒதுக்கியுள்ளனர். துரதிஷ்டசாலியான இப்பெண்ணுக்கு கற்பாறைகளுடனும் மரங்களின் வேர்கள் குவிந்துள்ளதுமான ஒரு இடத்தையே அந்த ஆண்கள் விட்டுக் கொடுத்துள்ளனர். இதன் பயனாக ஒவ்வொரு முறை அவள் கீழே போய்வரும் பொழுதும் சிறிதளவு மணலையே சேகரிக்க முடிகிறது.
கற்களுக்கும் வேர்களுக்கும் இடையிலே சிக்கியுள்ள மணலை அவள் கடும் போராட்டத்தின் மூலமே சேகரிக்கிறாள். இதற்காக அவள் பெறும் வருமானம் (ஒரு உழவு இயந்திரம் நிரம்புவதற்கு) ரூபா. 1500 மட்டுமே.
“எனது கணவர் நெல் வயல்களில் வேலை செய்தும் செங்கட்டி செய்தும் மணல் சேகரித்தும் நாளாந்த வருமானம் பெற்று வந்தார். ஆற்றிலே மணல் சேகரிக்கும் போது அவர் எனது உதவியை நாடுவதில்லை. ஒவ்வொரு நாளும் கடும் உழைப்பின் பின்னர் அவர் விடு திரும்பியதும் கடுமையான உடல் வலி பற்றி முறையிட்டுக் கொண்டிருப்பார். ஆனால் ஒருநாளும் மருத்துவர் ஒருவரைப் பார்க்கவோ அல்லது மருத்துவப் பரிசோதனைக்கென்றோ சென்றது கிடையாது. பின்னர் அவர் ஊர் காவல் படையில் சேர்ந்தார். இருப்பினும் அவருடைய உடல் நிலை மோசமடைந்ததுடன் ஊர்காவற் படை பயிற்சியில் இருக்கும்போது சிறுநீரகம் செயலிழந்த நிலையில் மரணமானார்” என்று கூறும்போது அவளுடைய குரல் நடுங்;கத் தொடங்கியது. அடுத்து வந்த 10 வருட கஷ்டத்தை அவளால் விபரிக்க முடியவில்லை.
“நானும் எனது இரண்டு பிள்ளைகளும் இந்த உலகில் தனித்து விடப்பட்டோம். அந்த நாட்கள் தொட்டு இன்றுவரை இந்தக் குடும்பத்தின் உழைப்பாளி நான் மட்டுந் தான்.” என்று தழுதழுக்கும் குரலிற் கூறிய அவள் “நாளொன்றிற்கு இரண்டு வேளை உணவு மட்டும் உண்போம். சில சமயங்களில் ஒன்றுடன் திருப்திப்பட வேண்டியிருக்கும். சமுர்த்தி நன்கொடை மூலம் கிடைக்கும் ரூபா. 2000 அரிசிக்கும் மணல் விற்றுவரும் பணத்தை ஏனைய பொருட்கள் வாங்கவும் செலவு செய்வேன்” என தனது திட்டமிடல் செலவுகள் பற்றி கூறுகிறாள்.
உக்கிப்போன கூரையின் கீழ்
அவளுடைய கணவன் இறந்தபின் ஊர்காவல்படை இப்போதிருக்கும் வீ ட்டை அவர்களுக்குக் கட்டிக் கொடுத்துள்ளதாம். “இந்தப் பகுதியில் நிலவும் கடுமையான காலநிலை காரணமாக வீட்டுக் கூரை மோசமாகச் சேதமடைந்து விட்டது. கூரையின் பிரதான வளை முறிந்துள்ளதால், கடுங்காற்று வீசும்போது அதனால் தக்குப்பிடிக்க முடியாது. இது எப்போது எங்கள்மீது விழும் என்று சொல்ல முடியாது” என்று சொல்லியவள் மேலும்
“அரசாங்கத்திடமிருந்து ஏதேனும் ஆறுதல் கிடைக்குமென எதிர்பார்த்து நான் பல தடவை கிராமசேவகரைச் சந்தித்து இது பற்றித் தெரியப்படுத்தினேன். அவரோ, என்னுடையதிலும் பார்க்கப் பழைய விடுகள் இங்கு இருக்கின்றன என்றும் பின்னர் இதைப் பரிசீலிப்பதாகவும்சொல்லிச் சென்றார்.” முறிந்துபோன கூரைத்தடிகளை பத்மா தானே கயிற்றினாற் கட்டி ஒரு இடைக்hகல பாதுகாப்பைச் செய்துள்ளாள்.
“யானைகள் எந்த வேளையிலும் வரக்கூடும். ஆவை வந்து இந்தக் கூரைமீது அடிக்குமானால் கட்டாயம் இந்தக் கூரை எங்கள் மீதுதான் விழும. அதனால் நாங்கள் கொல்லப்படவும் கூடும்.”
இவர்கள் ஒவ்வொரு இரவையும் அஞ்சி நடுங்கிக் கொண்டே கழிக்கிறார்கள்.
இப்போழுது பத்மாவிற்கு இந்தப் பயம் மட்டுமல்லாது அவள் கணவன் மணல் சேகரித்த நாட்களில் அனுபவி;த்த கஷ்டத்தைப்போன்ற தனக்கும் உடல்வலி ஏற்படலாம் என்ற பயமும் சேர்ந்துள்ளது. அவளுடைய கணவனைப் போன்றே அவளுக்கும் ஒரு வைத்தியரைப் பார்க்கவோ அல்லது அப்படி ஏதேனும் செய்வதற்கோ நேரம் இல்லாமலுள்ளது.
“ எனது கணவரும் அவரைப் போலவே எனது தாயாரும் அவர்களுக்கு ஏற்பட்ட உடல் உபாதையின்போது எவ்வளவு வலியை அனுபவித்திருப்பார்கள் என்பதை நான் இப்பொழுது உணரத்தொடங்கியுள்ளேன்.
நான் சிறியவளாய் இருந்தபொழுது எங்கள் தந்தையை இழந்தோம். அவர் பாம்பு தீண்டி இறந்தார். எனது தாயாருங்கூட தனது பிள்ளைகளுடன் இந்த உலகிற் தனித்து விடப்பட்டார். அதனால் நான் தரம் ஐந்து வரையில்தான் கல்வி கற்றேன்”
இரண்டு தலைமுறைகளாக அவளுடைய குடும்பம் அனுபவித்த இந்தத் துயர் நிறைந்த சூழ்நிலையிலிருந்து தனது குடும்பத்தைக் காப்பாற்றி முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கு தேவையான செல்வம் கிடைக்குமாவெனப் பத்மா தேடுகிறாள். அவளுடைய மகன் கெபெற்றி கொல்லாவை பாடசாலையிலும் மகள் யக்கவேவாபாடசாலையிலும் படிக்கிறார்கள்.
பத்மாவின் அயலவர் கேட்டுக்கொண்டதன் பேரிலும் துயர் அனுபவிக்கும் இந்தக் குடும்பத்திற்கு ஏதாவது அரசாங்க உதவி பெறக்கூடிய சில ஏற்பாடுகளைச் செய்யும் நோக்கத்துடனும் நாங்கள் கெப்பெற்ரிகொல்லாவை உதவிப் பிரதேச செயலர் திருமதி மஞ்சரி சிறீ சந்திரதாசவை அணுகினோம். இதற்கு முன்னரே அவருக்கு அந்தப் பெண்ணைப் பற்றித் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் கூரையைத் திருத்துவதற்கு வேண்டிய நடவடிக்கை எடுக்கும்படி கிராமசேவகர் பணிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் நிவாரணம் ஏதும் கிடைக்கக்கூடியதாக, இந்தக் குடும்பத்தைப்பற்றி சமூக சேவைகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாகவும் கூறினார்.
அரச யந்தரத்தில் எத்தனையோ நேர்மையான அலுவலர்கள் உள்ளபோதும் அதன் செயற்றிறன் கேள்விக்குரியது என்பது எமக்குப் பரிச்சயமான ஒரு விடயமாகும். பத்மாவிற்கு அரசாங்கத்திடமிருந்து சிறு உதவியேதேனும் கிடைக்கக் கூடும். ஆனால் அது அவளை முக்குணு ஓயா நீரிலிருந்து வெளியே கொண்டுவரப் போதுமானதாயிராது.
இந்த இரு இளம் பிள்ளைகளின் கல்வி தொடர்வதற்குக் தேவையான நிதியுதவியை அன்பளிப்புச் செய்யத் தயாராயுள்ள கருணையுள்ளம் யாராயினும் உள்ளனரா?