-ஐ. நா சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் -
“மொழி ரீதியான இடைவெளி பாரிய பிரச்சினையாகவுள்ளது.”
வடக்கு, கிழக்கில் நான் சந்தித்த தமிழ் பேசும் மக்கள் தாம் அரச நிறுவனங்களில் விசேடமாக பொலிஸ், மற்றும் வைத்தியசாலைகளில் தமிழ் மொழி பயன்பாடு இன்மை காரணமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை என்னிடம் விளக்கிக் கூறினர்.
ரீட்டா ஐசாக் நதேயா ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் ஆவார். இவர் கடந்த 10.10.2016 முதல் 20.10.20116 வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு தரப்புகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
குறிப்பாக 30 அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள், 9 அமைச்சர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதுடன் சிவில் சமூக பிரதிநிதிகள் , சமூகத் தலைவர்கள், மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பாக செயற்படும் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டடோரையும் சந்தித்தார்.
இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், தெலுங்கர்கள், வேடுவர்கள், பறங்கியர்கள், மலே இனத்தவர் மற்றும் இலங்கை ஆபிரிக்கர்கள், ஆகியோர்களின் பிரதிநிதிகளும் சிங்கள பௌத்த தலைவர்களும் இவரைச் சந்தித்தோரில் அடங்குவர்.
அவர் தனது விஜயத்தின் இறுதியில் கடந்த மாதம் (ஒக்டோபர்) 20 ஆம் திகதி அன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடாத்தினார். இதன்போது நாம் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்
கேள்வி இலங்கையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பிற்பாடு நல்லிணக்க செயற்பாடுகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கருதுகிறீர்களாை?
பதில் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய நீண்ட கால சிவில் யுத்தத்தின் பின்னர் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கான முழுமையான நன்கு திட்டமிடப்பட்ட பொறுப்புக் கூறும் முறைமை ஒன்று தாபிக்கப்பட வேண்டும். ஆனால் இது ஒரே இரவில் சாத்தியமாகக் கூடியதல்ல என்பதே எனது அவதானமாகும்.
2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கம் அனைத்து சமூக மக்களின் ஆதரவைப் பெற்றதுடன் நல்லிணக்கம் தொடர்பான எதிர்பார்ப்பையும் கொண்டுவந்தது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியது. இதன்போது மீள் நிகழாமையை உறுதிப்படுத்த உண்மையைக் கண்டறியும் உரிமை, நீதி வழங்குதல், மற்றும் நட்டஈடு ஆகிய அம்சங்களைக் கொண்ட திட்டத்திற்கு அரசாங்கம் வாக்குறுதி அளித்தது. அதன்படி நல்லிணக்கத்திற்கான அலுவலகம் உருவாக்கப்பட்டது. அந்த அலுவலகமானது நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் சமூகங்களின் கருத்துக்களை ஆராய்ந்து வந்துள்ளது. எனினும் அரசாங்கமானது தற்போதைய மறுசீரமைப்பு செயற்பாட்டில் சிவில் சமூகம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினதும் குரல்களை உள்ளீர்க்க வேண்டும்.
அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான மக்கள் கருத்தறியம் குழு மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான கருத்தறியும் குழு என்பன ஆயிரக்கணக்கான மக்களின் யோசனைகளை பெற்றுக்கொண்டுள்ளன. இது மக்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கப்பால், மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான விசேடமான சட்டங்களையும் கொள்கைகளையும் இயற்றியமைக்காக அரசாங்கத்திற்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்.
கேள்வி நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் இலங்கை எதிர்நோக்கும் பிரதான சவால்களாக எவற்றை அடையாளப்படுத்துவீர்கள்?
பதில் அரச நிறுவனங்களிலும் பல்வேறுபட்ட இனப் பிரிவுகளிடையேயும் மேலும் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். அதுமாத்திரமன்றி அரசாங்கத்தின் சகல முன்னெடுப்புகளிலும் தீர்மானமெடுக்கும் செயற்பாட்டிலும் சிறுபான்மையினருக்கு போதிய இடமளிக்கப்பட வேண்டும். அரச மற்றும் மாகாண நிர்வாகத்திலும் அவர்களுக்கு பங்களிக்கப்பட வேண்டும்.
என்னைச் சந்தித்த சிறுபான்மையின குழுக்களின் பிரதிநிதிகள் பலரும் மேற்சொன்ன விடயங்களையே வலியுறுத்தினார்கள். மேலும் மொழி ரீதியான இடைவெளி பாரிய பிரச்சினையாக நோக்கப்படுகிறது. பெரும்பாலான அரச நிறுவனங்களில் சிங்கள மொழியே ஆதிக்கம் செலுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டது. இந் நிலை மாற்றப்பட வேண்டும்.
கேள்வி சிறுபான்மையின பெண்கள் அமைப்புகள் உங்களைச் சந்தித்ததாக குறிப்பிட்டீர்கள். இலங்கையில் பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகள் சர்வதேச நியதிகளுக்கேற்ப உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா?
பதில் சிறுபான்மையினங்களைச் சேர்ந்த பெண்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். தீர்மானம் எடுக்கும் செயற்பாட்டில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக காணப்படுகின்றது. பாலின வன்முறைகள் அதிகளவில் காணப்படுகின்றன.
வடக்கு, மற்றும் கிழக்கில் தமிழ் பெண்கள், யுத்தம் மற்றும் மோதல்களின் வடுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். விதவைகள், காணாமல்போனோரின் குடும்பங்கள், முன்னாள் போராளிகள் என பலர் கஷ்டப்படுகின்றனர். பெண்களைத் தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் அதிகமாக உள்ளன.
முஸ்லிம் பெண்களும் சமூக ரீதியாக சவால்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக திருமணம், மற்றும் விவாகரத்தின் போது 1951 ஆம் ஆண்டு முஸ்லிம் திருமண, மற்றும் விவாகரத்தின் சட்டமூலமே பிரயோகிக்கப்படுகிறது. இந்த சட்டமூலமானது 16வயதுக்குக் குறைந்த குழந்தைகள் திருமணம் முடிப்பதற்கு அனுமதிக்கிறது. இது தொடர்பில் ஆராய்வதற்கு ஏழு வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட குழு இன்னும் தனது அறிக்கையை கொடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டது. ”
1951 ஆம் ஆண்டு முஸ்லிம் திருமணம் மற்றும் விகாரத்து சட்டமூலம் சர்வதேச மனித உரிமை தரங்களுக்கமைய முஸ்லிம் சமூகத்தினதும் முஸ்லிம் பெண்களின் ஆலோசனையுடனும் மீளாய்வு செய்யப்படவேண்டும்.
கேள்வி நாட்டில் நீடிக்கும் மொழிப் பிரச்சினை தொடர்பான உங்கள் அவதானங்கள் எவை?
பதில் அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கையின் தேசிய மொழிகளாக சிங்களம், மற்றும் தமிழ் மொழி காணப்படுவதுடன் ஆங்கிலமானது இணைப்பு மொழியாக காணப்படுகின்றது. கடந்த மற்றும் தற்போதைய அரசாங்கம் என்பன பல்மொழி வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முக்கியமான நடவடிக்கைகளை எடுத்திருந்தன.
தேசிய மொழி சட்டம் மற்றும் தேசிய மும்மொழிக் கொள்கை என்பன சிங்களம், மற்றும் தமிழ், ஆங்கில மொழிகளுக்கு சம ஊக்குவிப்பை வழங்குகின்றன. இரண்டாவது மொழியாக சிங்களம், அல்லது தமிழ் மொழியை கற்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது பாடசாலையில் ஒன்பதாவது ஆண்டு வரை இவ்வாறு கற்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி அரச ஊழியர்களும் இரண்டாம் மொழியைக் கற்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும் யதார்த்தத்தில் மொழிக்கு வழங்கப்படும் மதிப்பில் பாரிய சவால்கள் காணப்படுகின்றன.
வடக்கு, கிழக்கில் நான் சந்தித்த தமிழ் பேசும் மக்கள் தாம் அரச நிறுவனங்களில் விசேடமாக பொலிஸ், மற்றும் வைத்தியசாலைகளில் தமிழ் மொழி பயன்பாடு இன்மை காரணமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை என்னிடம் விளக்கிக் கூறினர்.
நாட்டில் செயற்படும் அதிகளவான அரச நிறுவனங்கள், சிங்கள மொழியையே எழுத்து மற்றும் வாய்மூல மொழியாக பயன்படுத்துவதாக எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
இந்த மொழி விடயத்தில் காணப்படும் இடைவெளியானது தமிழ் பேசும் மக்களை பாரிய அதிருப்திக்கு கொண்டு செல்கிறது. தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் செயற்படும் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் தமிழ் மொழி தெரியாதவர்களாக இருக்கின்றனர். இது அன்றாட பிரச்சினைகளை உருவாக்குவது மட்டுமன்றி பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கிடையிலான இடைவெளியை மேலும் ஏற்படுத்துகிறது.
அதுமாத்திரமன்றி சிறுபான்மை மக்கள் தமது மொழி அழிந்து விடுமோ என்ற அச்சத்தையும் கொண்டுள்ளனர். குறிப்பாக மலே, வேடுவர், தெலுங்கு, மற்றும் இலங்கை ஆபிரிக்கர்கள் தமது தாய்மொழி பாடசாலைகளில் கற்பிக்கப்படவேண்டுமென தெரிவிக்கின்றனர். தமது மொழி முழுமையாக அழிந்து விடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் இருக்கின்றனர்.
கேள்வி அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்குவது ஏனைய சிறுபான்மை மதங்களை கவலைக்குள்ளாக்கியுள்ளதே.…
பதில் அரசியலமைப்பில் பௌத்தத்திற்கான முதன்மை இடத்தை தொடர்ந்து பேணுவதானது மேலும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கும், அடக்கு முறைமைகளுக்கும் வழிவகுக்கும் என மக்கள் அச்சமடைகின்றனர்.
இலங்கையில் 70.1 வீதமானவர்கள் பௌத்தர்கள், அரசியலமைப்பின் 9 ஆவது சரத்தின்படி இலங்கை குடியரசானது பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்குகிறது. அரசாங்கம் பௌத்த சாசனத்தைப் பாதுகாக்கவேண்டும். அதேநேரம் ஏனைய மதங்களின் உரிமையையும் உறுதிப்படுத்த வேண்டும்.
பல பிரதேசங்களில் மதங்களுக்கிடையில் அமைதியான சகவாழ்வு காணப்படுகிறது. எந்தப் பிரச்சினையுமின்றி கோவில்கள், விகாரைகள், பள்ளிவாசல்கள் அமைக்கப்படுகின்றன. ஜனாதிபதியின் கீழ் சர்வ மதப் பேரவை அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்கின்றேன்.
எனினும் பெரும்பான்மை மத குழுக்களினால் சவால்கள் இன்னும் காணப்படுகின்றன. கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்கள் புதிய மதஸ்தலங்களை கட்டியெழுப்புவதும் மயானங்களைப் பெறுவதிலும் கஷ்டங்கள் இருப்பதாக எனக்குக் கூறப்பட்டது.
சில நேரங்களில் அரசியலமைப்பில் 9 ஆவது சரத்தானது இவ்வாறான செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதாக தெரிகிறது.
பாரம்பரிய ரீதியில் பௌத்தர்கள் வாழாத பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவது பகைமைக்கு வித்திடுகிறது. பல வருடங்களாக பொதுபல சேனா போன்ற பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்கள் நடத்தும் தாக்குதல் தொடர்பில் எனது அவதானத்துக்கு கொண்டு வரப்பட்டது.
விசேடமாக 2011 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை வன்முறைகள், மற்றும் வெறுப்பு உரைகள், சிறுபான்மையினரை நோக்கி, இடம்பெறுவதை காணமுடிகிறது. குறிப்பாக சிறுபான்மை மதஸ்தலங்கள் வர்த்தக நிலையங்கள், மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. அமைதியையும் சமாதானத்தையும், கட்டியெழுப்ப முயற்சிக்கப்படும் ஒரு நாட்டில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு அனுமதி இருக்கக்கூடாது.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் ஒன்பதாவது சரத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பில் ஆராயப்படவேண்டியது அவசியமாகும். எது நடந்தாலும் சிறுபான்மை மதங்களின் பாதுகாப்பும் ஊக்குவிப்பும், உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
கேள்வி முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி பல அமைப்புகள் உங்களைச் சந்தித்து முறையிட்டன. இவற்றில் பிரதான பிரச்சினைகளாக எவற்றை அடையாளம் கண்டீர்கள்?
பதில் முஸ்லிம் சிறுபான்மை சமூகம் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எமது சந்திப்புகளில் கலந்துரையாடப்பட்டன. இவற்றில் காணிப் பிரச்சினைகள், இடப்பெயர்வு மற்றும் மீள்குடியேற்றம் என்பன பிரதானமானவையாகும்.
அத்துடன் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மற்றும் அவர்களுக்கு புகலிடம் அளித்த மக்களின் பிரச்சினைகள் குறித்தும் எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
எனினும் அரசாங்கத்தின் முக்கியமான முன்னெடுப்புகளில் முஸ்லிம்களின் விவகாரம் உள்ளடங்கப்படவில்லை எனும் கவலையை பலரும் என்னிடம் வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக போரினால் தமது சமூகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம்கள் கவலைப்படுகின்றனர்.
1990 இல் சுமார் 30000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வடக்கு கிழக்கிலிருந்து வெளியேறியதாகவும் அவர்களில் 20 வீதமானோர் மாத்திரமே இதுவரை தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறியுள்ளதாகவும் எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இது மிகப் பெரிய எண்ணிக்கையாகும்.
முக்கியமான பல்வேறு விடயங்களில் முஸ்லிம்களின் நலன்கள் உள்ளடக்கப்படவில்லை என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. எனவே முஸ்லிம்கள் தனித்துவம்வாய்ந்தவர்களாக கருதப்பட்டு அரசாங்கத்தின் சகல முன்னெடுப்புகளிலும் கண்டிப்பாக உள்வாங்கப்பட வேண்டியது அவசியமாகும். முஸ்லிம்களின் பிரச்சினைகள் தனித்துவமான கவனத்தை வேண்டி நிற்கின்றன.
முஸ்லிம்களுக்கும் தமிழ் மற்றும் சிங்களவர்களுக்குமிடையிலான உறவு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. அத்துடன் மத சுதந்திரமும் மிக முக்கியமான விடயமாகும். பள்ளிவாசல்கள் மீதான பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் இஸ்லாம் பற்றி பிற மதத்தவரின் புரிதல்களில் குறைபாடுகள் உள்ளதாக முஸ்லிம்கள் கவலைப்படுகின்றனர். ஏனெனில் பாடசாலைக் கல்வியில் இஸ்லாம் தொடர்பில் பிற மதத்தவர்களுக்குப் போதுமானளவு போதிக்கப்படுவதில்லை. இஸ்லாம் என்ற பதம் தவறாக விளங்கப்பட்டுள்ளது. இது ஏதோ ஒரு புள்ளியில் தமக்கு பாதகமாக அமையலாம் என முஸ்லிம்கள் கவலைப்படுகின்றனர்.
எனவே இலங்கை அரசாங்கம் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் அதற்கான பொருத்தமானதும் விசேடமானதுமான பொறிமுறை ஒன்றை உருவாக்க முன்வர வேண்டும்.