தோட்டப்புறங்களில்….
இந்து மாணவர்களுக்கு பௌத்தமும்,இஸ்லாமும்!
இலங்கைப் பாடசாலைகளில் சமயபாட வகுப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயம். ஆனால் தென் பகுதியிலுள்ள சில தமிழ் மற்றும் இந்து பிள்ளைகள் தங்கள் சொந்த மதம் அல்லாது ஏனைய மதங்களைப்பற்றிக் கற்கும்படி நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்.
சமயக் கல்வி இலங்கையிற் கட்டாயமானது. அத்துடன் இலங்கையரான ஒவ்வொரு பிள்ளையும் தங்கள் பெற்றோரின் சமயம் பற்றிய கல்வியைப் பெறக்கூடியதாய் இருத்தல் வேண்டும். துரதிஷ்டவசமாக இது உள்ளுர் பிள்ளைகள் எல்லோர் விடயத்திலும் உண்மையானதல்ல. சில மாணவர்களின் குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகள் கற்கவேண்டுமென விரும்பும் சமயத்தையல்லாது பாடசாலை விரும்பும் சமயம்பற்றிக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
இலங்கையின் தென்பகுதியில் இந்தப் பிரச்சனைக்குப் பல உதாரணங்களைக் காணலாம். தெனியாய இராஜபக்ஷ என்ற சிங்களப் பாடசாலையில் எட்டு வயதுப் பெண்பிள்ளையான கே.கேஷானி தரம் 3இல் கல்வி கற்கிறாள். கேஷானி இந்துக் குடும்பம் ஒன்றிற் பிறந்திருந்த போதிலும் அவள் படிக்கும் பாடசாலை காரணமாக அவளால் பௌத்த மதம் பற்றியே படிக்கமுடிகிறது. “எங்கள் சமயத்தைப் போதிப்பதற்கான வேறு வழியேதும் எங்களுக்கில்லை” என அவளின் தாயாரான தெனியாயவில் ஒரு தேயிலைத் தோட்டத்தில் வசிக்கும் எஸ்.வசந்தா குமார (குமார் என்ற தமிழ் பெயர்களைக்கூட அவர்கள் குமார என்றே பதிந்துவைத்துள்ளனர்.) கூறுகிறார்.
குடும்பத்தின் ஒரே மகன் வேறொரு பாடசாலைக்குச் செல்கிறார். அங்கு அவரால் இந்து சமயம் பற்றிக் கற்றுக்கொள்ள முடிகிறது. “எங்கள் மகன் இந்து மதம்பற்றி நன்றாக அறிந்துள்ளான். ஆனால் நாங்கள் குடும்பமாக வழிபாட்டில் ஈடுபடும்போது எங்கள் மகளால் பௌத்த வழிபாடுகளையே பாடமுடிகிறது.” எனக் குமார விளங்க வைக்கிறார்.
/
பிறிதொரு உதாரணம், 14 வயதான சுப்பிரமணியம் போல் சொல்கிறார். அவருடைய குடும்பத்தினர் இந்துக்களான போதிலும் அவர் பாடசாலையில் பௌத்த மதம் கற்கிறார். அவர் தரம் 9இல் படிக்கிறார். அவருடைய குடும்பத்திலுள்ள மற்றைய நான்கு பிள்ளைகளும் இதே பாடசாலையில்தான் கல்வி கற்கின்றனர். அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் தமிழ் பாடசாலைகள் இல்லாமையினால் உண்மையில் அவர்களுக்கு வேறு தெரிவு இருக்கவில்லையென அவர்களின் தாயார் கூறுகிறார்.
தெனியாய தேயிலைத் தோட்டத்தில்த மிழ் மொழிமூலம் கற்பிக்கும் நான்கு பாடசாலைகளும் சிங்கள, தமிழ் மொழிமூலங்களில் கற்பிக்கும்; பாடசாலை ஒன்றும் உள்ளன. ஆனால் முற்று முழுதாக இந்த வாய்ப்பு வழங்கப்படாத சில பகுதிகள் உள்ளதுடன் அங்குள்ள ஆசிரியர்கள் தமிழில் வகுப்புகள் நடாத்துவதுமில்லை. உதாரணத்திற்கு கொட்டப்பொல விலுள்ள ஒரு பாடசாலையின் மூன்றில் இரண்டு வீதமான மாணவர்கள் தமிழர்களானபோதும் அவர்கள் தமிழில் கல்வி கற்க முடியாதுள்ளதுடன் அவர்களுடைய பெற்றோரின் இந்துமத நம்பிக்கைகளுடன் இணைந்த மத போதனை பெறுவதற்கான அவர்கள் உரிமையும் மறுக்கப்படுகிறது”
காலி திருச்சபையின் பெருந் தோட்டங்களுக்கான சமூக அபிவிருத்திச் சேவை, ‘கோடெசேபி’யின் ஒருங்கிணைப்பாளரான கே. சதீஸ்குமாரா கொட்டப்பொலவில் வசிக்கும் 300 வரையான தமிழ்ப் பிள்ளைகள் சிங்களப் பாடசாலைகளில் கல்வி கற்கிறார்களெனக் கூறுகிறார். “சில பகுதிகளில் தமிழ்ப் பாடசாலைகள் இல்லாமையால் இந்தப் பிள்ளைகள் சிங்களப் பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். அவர்களுக்குத் தமிழில் கல்வி கற்பதற்கோ அல்லது இந்து மதம் பற்றி அறிவதற்கோ சந்தர்ப்பமேதுமில்லை” என்று சதீஷ்குமாரா கூறுகிறார்.
http://www.codesp.org/
தனது மூன்று பிள்ளைகளுக்கும் கிடைக்கப்பெறும் சமயக் கல்விபற்றி அதிருப்தியடைந்துள்ள 58 வயது தோட்டத் தொழிலாளியான சின்னா ராமன் இந்தப் பிள்ளைகள் தங்கள் சொந்த மதத்தைப்பற்றி தங்கள் பெற்றோரிடமிருந்து கற்றுக் கொள்வதே அவர்களுக்கு இருக்கும் ஒரே வழியெனக் கூறுகிறார். இந்துக் கோவில்களும் சமயக் கல்வியை அல்லது சமய வகுப்புகள் எதையும் ஒழுங்கு செய்து நடத்துவதில்லை என்பதையும் குறிப்பிடுகிறார்.
அதேநேரம் பாடசாலைகள் இல்லாத காரணத்தினால் பல தமிழ் பிள்ளைகள் முஸ்லிம் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டியுமுள்ளது. மீண்டும் அவர்கள் அங்கேயும் தங்கள் சமயத்தைப் பற்றிக் கற்றுக்கொள்ள முடியாதுள்ளனர்.
பாடசாலை ஆசிரியர் 35 வயதுடைய கசுன் பத்திரன கூறுகையில் “இங்குள்ள தமிழ் இந்து பிள்ளைகள் முஸ்லிம் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. தங்களுடைய சொந்தக் கலாசாரத்தைப் பற்றி அல்லது இந்து மதம் அவர்கள் எவ்வாறு நடக்க வேண்டுமென எதிர்பார்க்கிறதோ அவற்றை எல்லாம் கற்றுக் கொள்வதற்கு அவர்களுக்கு எந்த வழியுமில்லை. இது ஒரு மிகப் பெரும் அநீதி” எனத் தெரிவிக்கிறார்.
ஒருவர் தனது மதத்தைப் பற்றிக் கற்பதற்குரிய சுதந்திரத்தை மறுப்பது மிகப் பெரிய மனித உரிமை மீறல்.
உள்நாட்டு யுத்தத்தினால் இலங்கைச் சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட மாற்றங்கள் இப் பகுதிகளிலுள்ள பிள்ளைகள் கல்வி கற்கும் முறைகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தி யுள்ளன. தென்பகுதிகளில் வாழும் அநேகமான இந்துக்கள் தங்கள் சமயப்பற்று சார்பான அடையாளங்களை மறைத்ததுடன் தாங்கள் தமிழர் என்பதையும் மறைக்க முயன்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற ஆயுதக் குழுவுடன் தொடர்புகள் அற்றவர்கள் என்ற உண்மையை, தமிழர் அடையாளங்களை மறைப்பதனூடாகத்தான் அவர்களால் செய்யமுடிந்துள்ளது போலும். கோடெசேபியின் பிறிதொரு சமூக ஒருங்கிணைப்பாளர் சியோன் டி அல்விஸ் கூறுகையில் “ தமிழ் பெற்றோரிடம் தங்கள் பிள்ளைகளுக்குச் சிங்களத்திலே கல்வி கற்பிக்கும் மனப்பாங்கும் காணப்பட்டது. இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிங்களப் பெயர்களையும் சூட்டியுள்ளனர். ஆனால் இதனை மாற்ற வேண்டிய காலம் வந்துள்ளது. தங்கள் பிள்ளைகள் சிங்களம் கற்றால் அவர்களுக்குச் சமூகத்தில் சிறப்பான இடம் கிடைக்குமெனப் பல பெற்றோர்கள் கருதுவதன் காரணமாக இப் பிள்ளைகளின் மதமும் கலாசாரமும் மறைந்து செல்கின்றன. பெற்றோர்கள் யாவருக்கும் தங்கள் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதன்றி வேறு தெரிவு எதுவும் இல்லை. பலர் தங்கள் பிள்ளைகளுக்குச் சிங்களத்தில் கல்வி கற்பிக்க விரும்புவதுதான் உண்மை” என்கிறார்.
“பணக்காரக் குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை பௌத்த அல்லது முஸ்லிம் பாடசாலைகளுக்கு அனுப்புதற்கு விரும்புகின்றனர்.” என உள்ளுர் ஆசிரியர் ஒருவர் விளக்கினார் இலங்கைச் சமூகத்தில் முன்னேறிச் செல்வதற்குப் பிள்ளைகள் சிங்களத்தில் கல்வி கற்க வேண்டுமென அவர்கள் நம்புகின்றனர். அதுவும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அந்தப் பிள்ளைகள் பெரும்பாலும் இந்து சமயத்தை மறந்து விடுகின்றனர்.
தங்கள் பாடசாலையில் பயிலும் பிள்ளைகளுக்கு இந்து சமயத்தைப் பற்றிப் போதிக்க விரும்பினாலும் சமய வகுப்புகளை நடத்துவதற்கு வேண்டிய ஆசிரியர்கள் இல்லாமையே இப்பிரச்சனைக்கு முக்கிய காரணம் என சிங்களப் பாடசாலைகள் கூறுகின்றன. ஒரு தமிழ் ஆசிரியரே வேறுவேறு பாடசாலைகளில் வகுப்புகளை நடத்தக்கூடுமெனின் பிள்ளைகளின் பாட அட்டவணைகளை அதற்கு இடமளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யமுடியும் என்றும் ஒரு ஆசிரியர் ‘த கட்டமரன்’ க்குக் கூறினார்.
இந்து மதக் கற்கைநெறிகளில் தங்கள் உயர் கல்விகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகள் இங்கு வந்து இளைய மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கக்கூடியதாக சேவையில் இணைத்துக் கொள்ளலாம் என்று ஹ_லந்தாவ தமிழ் பாடசாலை அதிபர் ஆலோசனை கூறுகிறார்.
கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளராக இருக்கும் பிரதிபா பஹநாமஹேவா அவர்கள் ‘ஒருவர் தனது மதத்தைப் பற்றிக் கற்பதற்குரிய சுதந்திரத்தை மறுப்பது மிகப் பெரிய மனித உரிமை மீறலென வாதிடுகிறார். பொருத்தமான ஆசிரியர்களைக் கூடுதலாகச் சேவையில் இணைப்பதன் மூலம் இப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு’ என அவர் நம்புகிறார்.
அதேவேளை இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதெனவும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் இப் பகுதியிலிருக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படுமெனவும் இந்த நாட்டின் கல்வி மந்திரி அகில விராஜ் காரியவாசம் அவர்கள் கூறினார்.