‘உருக்குமிளகுக் கஞ்சி’
பாரம் தூக்கும் வேலைகளைச் செய்யும் ஆண்களும் விரும்புவது !
பகலெல்லாம் மூட்டை தூக்கிக்களைத்து வரும் இவர், இரவு நேரங்களில் நெஞ்சுவலியால் அவஸ்தைப் படுவார்……..அப்போதுதான் என் பாட்டி எனக்கு இந்த ‘உருக்குமிளகுக் கஞ்சி’யைப் பற்றிச் சொன்னார்…….
“எனது கணவர் மூட்டை ஏற்றி இறக்கும் தொழிலில் ஈடுபட்டுவந்தார். கொழும்பில் இருந்து சாமான்களை ஏற்றி வரும் லொறியிலிருந்து சீனி, அரிசி மூட்டைகளை இறக்கி இரண்டாம், மூன்றாம் மாடிகளில் உள்ள ஸ்டோரூம்களில் போட வேண்டும். பகலெல்லாம் மூட்டை தூக்கிக்களைத்து வரும் இவர், இரவு நேரங்களில் நெஞ்சுவலியால் அவஸ்தைப் படுவார். அடுத்தநாளும் கடைக்கு வேலைக்குப் போகவேண்டுமே… நோய் என்று வீட்டில் படுத்தால் பிள்ளை குட்டிகள் பட்டினியில் கிடக்கும். நான்,எனது சகோதரங்கள், பிள்ளைகள், அம்மா, பாட்டி என எனது குடும்பம் பெரியது. இவர்தான் எல்லோருக்கும் சம்பாதித்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறான நிலையில் தான் இவரது நெஞ்சுவலி தொடர்பில் ஒரு முறை எனது அம்மாவிடமும் பாட்டியிடமும் சொல்லிக் கவலைப் பட்டேன். அப்போதுதான் என் பாட்டி எனக்கு இந்த ‘உருக்குமிளகுக் கஞ்சி’யைப் பற்றிச் சொன்னார். ஒரு முறை பாட்டியின் உதவியுடன் செய்து கொடுத்தேன். அவருக்கு நல்ல விருப்பம். வேலைக்குச் சென்று சோர்வாக வருபவருக்கு நான் இதை தினமும் செய்து கொடுத்தேன். உடலிலும் மாற்றம் தெரிந்தது. அவர் கொஞ்சம் தெம்பாகவும் வேலை செய்ததுடன். குறித்த மூட்டைகளை விடவும் அதிகளவு மூட்டைகளையும் தூக்கியதாகச் சொன்னார்.” என முகமட் முகைதீன் சித்தி சைபியா கூறுகிறார்.
சிலாபம் சவரானை கிராமத்தில் வசிக்கும் இவர் அந்த கஞ்சிபற்றி விளக்குகிறார்.
“ புள்ளே… இதெல்லாம் எங்கட பாட்டிமார்கள்ட சாப்பாடு. இதைச் சாப்பிடுறதாலை உடம்பு தெம்பாகிறதோட உடல் களைப்பு, காய்ச்சல், என்பனவும் நீங்குது. உடம்புக்கு வேற சத்தான சாப்பாடு, வயல்வேலை செய்றவங்க மற்றது பாரம் துக்குறது, போன்ற பாரமான வேலைகளைச் செய்யும் ஆண்களும் விரும்பி உண்கின்ற ஒரு சாப்பாடு, முந்தனகாலத்தில வீட்டில புள்ள குட்டிகளே பத்துப் பதினைந்து பேர் இருப்பாங்க அப்ப அவங்கட பாட்டி தாத்தா, என்று பார்க்கும் போது, எப்படியும் இருபது இருபத்தைந்து என்று இருப்பாங்க, இப்பத்தையப் போல மூலைக்கு மூலை சாப்பாட்டு கடையும் இல்லை. முழத்துக்கு முழம் முதியோர் இல்லமும் இல்லை. அதனாலை அந்தக்கால வீட்டுப் பொம்புளைகள் மாலை நேரங்கள்ள சும்மா இருக்காம இவ்வாறு சிற்றுண்டிகள் செய்வது, மற்றும் உணவு தயாரிப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்வது என்பது அவர்களது வாடிக்கை. இப்ப தாத்தா பாட்டியும் வீட்டில இல்லை அவங்கட காலத்து சாப்பாடும் இல்லை. அவங்கட அருமை பெருமையும் இல்லை.” என்று வேதனைப்படும் இவர் இன்றும் தன் பிள்ளைகளுக்காக இதைச் செய்துவருகிறார்.
தேவையான பொருட்கள்
/
வறுத்த நாட்டரிசி- 250 கிராம்
சீனி-500கிராம்
தண்ணீர் – 1 கோப்பை
சுக்கு – 2 துண்டு
மிளகு – 20 கிராம்
ஏலக்காய் – 5 கிராம்
கறுவாப்பட்டை- 5 துண்டுகள்
தேங்காய்ப் பால்- 1 கோப்பை (கட்டிப்பால்), (தேங்காய் அரை மூடி) உப்பு தேவையான அளவு