கல்கந்த தம்மானந்த தேரர்
அறிவுள்ள சமூகம் மௌனம் சாதிப்பது ஆபத்தானதாகும்.
கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களில் விவாதங்கள் நடைபெற்றன. கருத்துக்கள் பரிமாறப்பட்டன. ஆனால் இப்போது அந்த நிலைமைகள் இல்லை.
தொடர்ச்சியாக பல வருடங்கள் தொடர்ந்த யுத்தத்தின் பின்னர் நல்லிணக்க நடவடிக்கையில் எவ்வாறு ஒருவர் மற்றவருடன் புரிந்துணர்வை கடைபிடிக்க முடியும் என்று வல்பொல ராஹல நிறுவனத்தின் விரிவுரையாளரும் விஹாராதிபதியுமான கல்கந்த தம்மானந்த தேரர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு : –
பிரச்சினை ஒவ்வவொருவரது தலைகளிலும் இருக்கின்றது என்று வல்பொல ராஹல நிறுவனத்தின் பௌத்த கற்கைநெறிகளுக்கு பொறுப்பான துறைத் தலைவரும் விஹாராதிபதியுமான கல்கந்த தம்மானந்த தேரர் தெரிவிக்கின்றார். முரண்பாட்டுடன் சம்பந்தப்பட்ட சிங்களவர்கள் அல்லது தமிழர்கள் ஆகிய இருண்டு தரப்பினரும் பிரச்சினையை சரியான முறையில் புரிந்துகொள்ளத் தவறிய நிலையில் குறை காணப்படுகின்றது. நாடு வெற்றி பெற்றவர்கள், தோல்வி கண்டவர்கள் என்ற அடிப்படையில் பிளவுபட்டு காணப்படும் நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதோடு இதற்காக நீண்ட காலத்தைச் செலவிடக்கூடாது என்பது இளைஞர்களது ஒரே எதிர்பார்ப்பாகும் என்று அவர் கூறுகின்றார்.
த கட்டுமரன் :- இலங்கையில் இனவாதம் நிலைபெறுவதோடு இரண்டு பக்கங்களிலும்தவறு காணப்படுகின்றதல்லவா? அத்துடன் இலங்கை அரசியல் வாதிகள் இந்த சந்தர்ப்பத்தை அவர்களது சொந்த தேவைக்காக பயன்படுத்துகின்றனர். இந்த நிலை தொடருமானால் நாட்டில் என்ன நடைபெறும் என்று கூற முடியுமா?
கல்கந்த தம்மானந்த தேரர் : – தமிழர்கள் அல்லது சிங்களவர்கள் என்ற அடிப்படையில் பொதுமக்களிடம் பிரச்சினை பொதுவானதாகும். வடக்கில் வாழும் மக்கள் வயல் நிலைங்களில் வேலை செய்வது போன்றே தெற்கில் வாழும் மக்களும் வயல்களில் வேலை செய்கின்றனர். ஆனால் வடக்கில் மக்களுக்கு நல்ல பாடசாலைகள் அல்லது கல்வி வசதிகள் இல்லை. இளம் தலைமுறையினருக்கு தொழில்வாய்ப்புக்கள் இல்லை.
தெற்கில் வாழும் மக்களைவிட வடக்கில் வாழும் மக்கள் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் துயரங்களை அனுபவித்து வருவதோடு வித்தியாசமான அனுபவத்தையும் பெற்றவர்களாக உள்ளனர். ஓவ்வொருவரும் இந்த பிரச்சினையை சரியான முறையில் அனுக வேண்டும். மிகவும் இலேசான கருத்துக்களைக் கொண்டு இந்த பிரச்சினையை இலகுவாக தீர்த்துவிட முடியாது.
அதேநேரம் தெற்கில் வெற்றி என்ற உணர்வு இருந்து வருகின்றது. பல குழுக்கள் இந்த உணர்வை ஏற்படுத்துவதற்காக செயற்பட்டு வருவதால் இந்த யுத்த வெற்றி என்ற உணர்வை மாற்ற முடியாதிருக்கின்றது.
இது ஒரு பாரதூரமான விடயமாகும். ஒரே நாட்டில் இரண்டு இனங்கள் வௌ;வேறான சிந்தனைகளுடனும் வித்தியாசமான உணர்வுகளுடனும் வாழ்ந்து வருகின்றனர். அங்கே மீண்டும் இனவாம் இருக்கின்றது என்றால் அது புதிய விடயமல்ல. தற்போதைய நிலைமைகளின் நீடிப்பின் தொடர்ச்சி என்றே கூறவேண்டும்.
த கட்டுமரன்:- இதற்காக என்ன செய்ய முடியும்?
கல்கந்த தம்மானந்த தேரர் : – அரசியல் வாதிகள் ஏதோ ஒருவகையில் பங்களிப்பு செய்ய வேண்டும். இன்றேல் இதுபற்றி பேசுவது அர்த்தமற்றதாகும். மதத் தலைவர்கள், செயலாற்றம் கொண்ட சமூகத்தலைவர்கள் போன்றோர்களின் ஆளமான பங்களிப்புடன்தான் இந்த நிலைமையை மாற்றம் செய்ய முடியும். ஆனாலும் அரசியல்வாதிகள் வாக்குகளை மட்டுமே இலக்காக கொண்டு செயலாற்றுகின்றனர். சமூகத்தில் உள்ள பிளவுகளை அவர்கள் வாக்குகளுக்காக பயன்படுத்துகின்றனர்.
த கட்டுமரன்:- மதத்தலைவர்கள் அதிகமாக செயலாற்ற வேண்டுமா?
கல்கந்த தம்மானந்த தேரர்: – ஆம். அது எனது எதிர்பார்ப்பாகும். பௌத்தம் இணைந்து செலாற்றுவதை எதிர்பார்ப்பதோடு கிறிஸ்தவம் உங்களது அயலவர்களுடன் அன்பையும் காருண்யத்தையும் பற்றி பேசுகின்றது. இது நல்ல ஆரம்பமாகும்.
நான் இதற்காக நல்லிணக்கம் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. நல்லது நடக்க வேண்டும் என்ற பதத்தை பயன்படுத்துகின்றேன். ஒருவர் மத வழிபாட்டுக்கு போனால் “நல்லது வேண்டும்” என்று கேட்பதோடு பௌதீக ரீதியான சுகம் வேண்டும் என்றும் கேட்கின்றார். இதுவே உள ரீதியான திருப்தியாகும்.
வைத்தியர் ஒருவர் சுகயீனம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தால் அந்த வைத்தியரால் வழங்கப்படுகின்ற மருந்தைக் கொண்டு நோய் குணமாகும் என்று நோயாளி ஒருவர் எதிர்பார்க்க முடியாது. மதத் தலைவர்களும் இவ்வாறுதான். அவர்களும் கடுமையான காயத்திற்குள்ளாகியுள்ளனர். ஆனாலும் ஏதாவது செய்யப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும்.
த கட்டுமரன்:- நீங்கள் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கின்றீர்கள். இந்த விடயத்தில் அறிவுடைய சமூகமும் மௌனம் சாதிக்கின்றதா?
கல்கந்த தம்மானந்த தேரர் : – அறிவுள்ள சமூகம் மௌனம் சாதிப்பதும் சிந்தனைகளை வளப்படுத்த முயற்சி செய்யாமல் இருப்பதும் ஆபத்தானதாகும். இன்று எமது சமூகம் மிக மோசமான நிலையில் ஆயுதமயப்படுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றது. இந்த காலகட்டத்தில் மாற்றுக் கருத்துக்களை கொண்டிருப்பதும் ஆபத்தானதாகும். கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களில் விவாதங்கள் நடைபெற்றன. கருத்துக்கள் பரிமாறப்பட்டன. ஆனால் இப்போது அந்த நிலைமைகள் இல்லை. இந்த விடயங்கள் தொடர்பான விவாதத்தில் யாரும் பங்கெடுக்க முன்வருதுமில்லை.
மாணவர்கள் மௌனம் சாதிப்பது போன்று விரிவுரையாளர்களும் பேசுவதற்கு தயங்குகின்றனர். அதனால்தான் நான் குறிப்பிட்டேன் யுத்ததம் காரணமாக ஒவ்வொருவரும் காயப்பட்டுள்ளனர் என்று. அந்த காயம் குணப்படுத்தப்பட வேண்டும்.
இந்த விடயத்தில் இளம் தலைமுறையினர் மிகவும் முக்கியமானவர்களாவர். நாம் பௌத்தத்தில் இருந்து கவனம் செலுத்துவதோடு உதாரணங்களையும் பார்க்க வேண்டும். மாசடைந்த நீரில் தொடர்ச்சியாக சுத்தமான நீர் கலக்கும் போது மாசுபட்ட நீர் தூய்மையடையும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது இலகுவான காரியமாக இல்லை. முயற்சி செய்தால் முடியாதது எதும் இல்லை. ஆனாலும் எப்படியாவது நாம் அதைச் செய்ய வேண்டும்.