மகியங்கனையில்….
‘செவ்வாய்’ கிரகம்(கிராமம்)?
இப்பொழுது செவ்வாய் வாசிகள் வருடத்திற் ஒரு முறைதான் தங்கள் நிலங்களிற் பயிர் செய்வதுடன் அவர்கள் மழை வரும்வரை காத்திருத்தல் வேண்டும். விளைச்சலுக்குப் போதுமான மழை இல்லாவிட்டால் அவர்கள் காடுகளுக்குச் சென்று தேன், மருந்துச் செடிகள், கிழங்குகள் விதைகள் முதலியவற்றைச் சேகரிப்பர். அல்லது அண்மையிலுள்ள ஆற்றில் மணல் தோண்டும் வேலைக்குச் செல்வார்கள்.
இலங்கையின் மத்திய பகுதியிற் செவ்வாய்க் கிரகமென அழைக்கப்படும் பகுதியொன்றுள்ளது. பின்தங்கிய நிலையில் வெகுதூரத்தில் அமைந்திருந்தமையினால் முதலில் இவ்விடம் தொலைவில் இருக்கும் கிரகத்தின் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது வேறு பல காரணங்களி னாலும் இங்கே குடியிருக்கவும் முடியாமலுள்ளது.
விண்வெளிக்கலம் ஒன்றில்லாமல் செவ்வாய்க்குச் செல்வது முடியாத காரியம் என ஒருவர் நினைக்கக் கூடும். அவ்வாறு இருக்கையில் சிகப்புக் கிரகத்தின் பெயர்கொண்டு அழைக்கப்படும் ஒரு பகுதி இலங்கையிலும் உள்ளது.
கொழும்பிலிருந்து செவ்வாய்க்குச் செல்லும் 417 கிலோ மீற்றர் தூரத்தை ஒருவர் பேரூந்து மூலம் இத் தீவின் மத்தியிலிருக்கும் மகியங்கனை வரைக்கும் பிரயாணஞ்செய்து பின்னர் முச்சக்கர வண்டிமூலம் செவ்வாய்க்குச் சென்றடைய வேண்டும். அந்த இடம் பின்தங்கியதொன்று. அதனால் பலர் அங்கு செல்வதில்ல.
‘செவ்வாய்’ என்ற பெயர் அந்த இடத்திற்கு எவ்வாறு வந்தது? அங்கு குடியிருப்பவர்களில் ஒருவரான எச்.எம்.பிரேரத்ன என்னும் விவசாயி இப் பெயர்பற்றிய விளக்கம் தந்தார். ‘இங்கு வேலை செய்யும் விவசாயிகள் ‘சேனை’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள் – சேனை என்பது உலர் வலயத்தில் காலாகாலமாக உள்ள காடுகளை அழித்து அந்த நிலத்தில் ஒரு சில வருடங்ளுக்குப் பயிர் செய்த பின்னர் அவற்றை கைவிடுதல். – அவர்கள் சேனை ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு நகர்ந்து கொண்டிருப்பர். பலர் அப்பகுதிகளை விட்டு வேறெங்கும் செல்லமாட்டார்கள். அவர்கள் இருந்த இடம் அவ்வளவு தூரம் தனிமைப்பட்டும் ஒரு வித்தியாசமான உலகமுமாய் இருந்தபடியால் யாரோ ஒருவர் செவ்வாய்க் கிரகமென விளையாட்டாக அதற்குப் பெயர் சூட்டினார். அது நிலைத்துவிட்டது.
இதெல்லாம் முன்னர் இங்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்கக்கூடியதாய் இருந்த காலத்தில் என்று பிரேமரத்ன நினைவுகூர்ந்தார். இப்பொழுது நீர்ப்பாசனம் இல்லாமையினால் இந்த இடம் உண்மையிலேயே செவ்வாய் ஆகிவிட்டதெனக் கூறும் இவர் “நீருமில்லை வாழ்வதற்கு வழியுமில்லை” என முறையிடுகிறார்.
அருகாமையிலிருந்த ஒரு துரிசு உடைந்து போனதுடன் பின் ஒருபோதும் அது சரிசெய்யப்படவில்லை. அத்துடன் செவ்வாய்;க்கு நீர் கொண்டு வருவதற்காக நிர்மாணிக்கப்பட்ட வாய்க்காலும் முறையாகத் திட்ட மிடப்படாது கட்டப்பட்டது. “இன்று வரை இந்த வாய்க்கால் ஊடாக தண்ணீர் பாயவேயில்லை” என மற்றொரு உள்ளுர் வாசியான விஜேபண்டா வலகெதர கூறுகிறார். அதனை ஒரு சாய்வான இடத்திற் கட்டியிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடைபெறவில்லையெனத் தொடரும் வலகெதர “ஒப்பந்தக்காரர்கள் கழிவு நீர் வடிகால் வெட்டுவது போலவே வாய்க்காலையும் வெட்டினார்கள். நீர் எதுவும் இதனூடாகப் பாயவில்லை. ஆனால் ஒப்பந்தக்காரருக்குப் பணம் வழங்கப்பட்டுவிட்டது” எனக் கூறினார். இதுபற்றி அதிகாரிகளுக்கு முறையிட்டு எழுதினேன். ஆனால் பதில் எதுவுங் கிடைக்க வில்லை. ஒருவேளே நாங்கள் செவ்வாய்க் கிரகவாசிகள் என்பதனால் அப்படியாக இருக்கக்கூடும்.
இப்பொழுது செவ்வாய் வாசிகள் வருடத்திற் ஒரு முறைதான் தங்கள் நிலங்களிற் பயிர் செய்வதுடன் அவர்கள் மழை வரும்வரை காத்திருத்தல் வேண்டும். விளைச்சலுக்குப் போதுமான மழை இல்லாவிட்டால் அவர்கள் காடுகளுக்குச் சென்று தேன், மருந்துச் செடிகள், கிழங்குகள் விதைகள் முதலியவற்றைச் சேகரிப்பர். அல்லது அண்மையிலுள்ள ஆற்றில் மணல் தோண்டும் வேலைக்குச் செல்வார்கள்.
செவ்வாயில் வசிக்கும் மக்களுக்கு வேறு பிரச்சனைகளும் உண்டு. யானைகளினால் உபத்திரவம் மட்டும் அல்லாது ஆபத்தும் உள்ளது. தடுப்பு வேலிகளினாலும் வனசீவராசிகள் திணைக்கள மேற்பார்வை யாளர்களினாலும் அவற்றின் வருகையைத் தடுத்து நிறுத்த முடியாதுள்ளது.
செவ்வாயில் 25 வருடங்கள் வரையில் வசித்துவரும் எம்.டீ.அமரசிங்க “யானைகளைத் தடுக்கும் வேலி பெயரளவிற்தான் இருக்கிறது. பகல் வேளைகளில் வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அலுவலர்கள் வருகின்றனர். இரவு வேளகளில் யானைகள் வருகின்றன. அவைகள் வந்து விளைச்சல் முழுவதையும் உண்டுவிடுவதால் நாங்கள் ஒரு தடவை மட்டும் வேளாண்மை செய்து உயிர் வாழ்வது எங்ஙனம்?” எனக் கூறினார்.
பாடசாலைகள் தொலை தூரத்தில் இருப்பதனாலும் அவற்றிற்குச் செல்லும் வீதிகள் சீராக இல்லாமை யினாலும் செவ்வாயிலுள்ள பிள்ளைகளுக்குக் கல்வியைப் பெறுவது கடினமாக உள்ளது.
தர்மதாச என்னும் மற்றொரு விவசாயி “போதியளவு நீரும் யானைகளைத் தடுக்கும் ஒழுங்கான வேலிகளும் இருக்குமானால் நாங்கள் ஒரு புது உலகத்தையே சிருஸ்டித்து விடுவோம்” என்று கூறினார்.
“நாங்கள் நம்பிக்கையுடன் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதில்லை. சீரான தெருவும் நீருமிருந்தால் எங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளிற் பாதி தீர்ந்துவிடும். அத்துடன் வேறு எதையெல்லாமோ எங்களாற் செய்ய முடியும். அத்துடன் செவ்வாய் என்ற பெயரையும் மாற்றிவிடுவோம்.” என்று உள்ளுரவரான ஏ.டீ. வீரரத்ன தெரிவித்தார்.