கண்டி கலவர பூமியில்.....
முஸ்லிம்களை பாதுகாத்த பௌத்த தேரர்கள்!
“நாம் பள்ளிவாசல்களுக்கு முன்பாகவும் பாதுகாப்பில் ஈடுபட்டோம். இக் கலகக்காரர்களின் நோக்கம் உடைமைகளை நாசப்படுத்துவதாகும். இப்பகுதியில் 14 அல்லது 15 பள்ளிவாசல்கள் உள்ளன. அவற்றைக் காப்பாற்ற எம்மால் முடிந்துள்ளது.”
” எமது பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களைத் தாக்கப் போகிறார்கள் என்று தகவல் கிடைத்தது. நாம் பள்ளிவாசல்களுக்கு முன்பாக வந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டோம். இந்தப் பகுதியில் 14 பள்ளிவாசல்கள் உள்ளன. அவற்றுக்கு ஒரு கல் கூட வீசப்படாது காப்பாற்ற எம்மால் முடிந்துள்ளது. பெரும்பான்மையினரின் பொறுப்பு சிறுபான்மையினரை பாதுகாப்பதாகும்” என்கிறார் கண்டி வதுரகும்புர தம்மானந்த தேரர்.
கண்டியில் ஏற்பட்ட கலவரத்தின் போது 17 பள்ளிவாசல்கள் தாக்கி சோமாக்கப்பட்டதாக அங்கிருந்து வந்த தகவல்கள் கூறின. பொலீஸ் தகவல்கள் நான்கு என்று கூறின. (https://timesofindia.indiatimes.com/world/south-asia/fresh-violence-erupts-in-riot-hit-kandy-pm-divested-of-police-portfolio/articleshow/63220748.cms)
காவி உடை அணிந்த பௌத்த தேரர்கள்தான் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை முன்னின்று வழிநடாத்தினார்கள் என வரும் செய்திகளுக்கு நடுவே அதே காவி உடை அணிந்த தேரர்கள் பலர் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களையும் உயிர் உடைமைகளையும் பாதுகாத்தார்கள் என வரும் செய்திகள் நமக்கு நம்பிக்கையைத் தருகின்றன.
பௌத்தர்கள் எல்லோரும் வன்முறையாளர்கள் அல்லர். பௌத்த பிக்குகள் எல்லோரும் மதவாதத்தைப் போதிப்பவர்களுமல்ல எனும் செய்தியை இந்தக் கலவர நாட்களில் அழுத்திச் சொன்ன ஏராளமானவர்களை நம்மால் காண முடிகிறது. அவர்களில் அதிகம் கவன ஈர்ப்பைப் பெற வேண்டிய மூன்று பௌத்த தேரர்களின் கதைகளை இங்கு தருகிறோம்.
கோமகொட விகாராதிபதி கஹகல தம்மானந்த தேரர்
/“அனே அபே ஹாமிதுருனே அபிவ பேரகன்ன. அபே மே தருவோ எக்க அபிட துவன்ன பே” என்று கூறியவாறு தெல்தெனிய கோமகொட கிராமத்தில் வசித்த முஸ்லிம் குடும்பங்கள் கடந்த 5 ஆம் திகதி மாலை அச்சமும் பீதியும் நிரம்பிய வேளையில் கோமகொட பன்சலையில் தஞ்சம் கோரி வந்தார்கள்.
பன்சலைக்கு அடைக்கலம் கோரி வந்த முஸ்லிம் பெண்கள் மத்தியில் இரு மாத குழந்தையை கையில் சுமந்து நிற்கும் தாயொருவரும் நிற்பதை கோமகொட விகாராதிபதி கஹகல தம்மானந்த தேரர் கண்டார்.
இவர்களை கண்டவுடன் கஹகல தம்மானந்த தேரரின் உள்ளம் மனிதநேயத்தால் நிரம்பிற்று. பன்சலைக்கு ஆதரவு தேடி வந்த முஸ்லிம் குடும்பங்களை பன்சலை மண்டபத்தில் தங்கச் செய்தார். அவர், உடனடியாக பிஸ்கட்,தேனீர் வழங்கி உபசரித்தார்.
ஆனால், அக்குடும்பங்களுக்கு இருந்தது பசி அல்ல. மரண பயம் என்பதை உணர்ந்து கொள்வதற்கு தம்மானந்த தேரருக்கு நீண்ட நேரம் செல்லவில்லை. எனவே, தேரர் இக்குடும்பங்களுக்கு தங்குவதற்கான இடத்தை பன்சலையில் செய்து கொடுத்ததுடன் பாய், தலையணை மற்றும் தேவையான வசதிகளையும் செய்து கொடுத்தார்.
அது மாத்திரமன்றி தம்மானந்த தேரர், கோமகொட கிராமத்தில் வாழும் சில பௌத்த சகோதரர்களை உடனடியாக பன்சலைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அவர்களும் தேரரின் அழைப்பை ஏற்று அவசரமாக பன்சலைக்கு விரைந்தனர்.
“எமது கிராமத்தில் எவரும் கலவரத்தில் பங்கு கொள்ளக்கூடாது. இங்கே பாருங்கள், இந்த இரு மாத பச்சிளம் குழந்தை வீறிட்டு அழுகின்றது. நாங்கள் யாவரும் மனிதர்கள்.
“எமது கிராமத்தில் எவரும் கலவரத்தில் பங்கு கொள்ளக்கூடாது. இங்கே பாருங்கள், இந்த இரு மாத பச்சிளம் குழந்தை வீறிட்டு அழுகின்றது. நாங்கள் யாவரும் மனிதர்கள். சிங்களவர்கள் முஸ்லிம்களை தாக்குகின்றனர் என்று முஸ்லிம்கள் பன்சலையில் தஞ்சம் கோரி வந்துள்ளனர். இங்கு வசிக்கும் சிங்களவர்களால் தொந்தரவு ஏற்படாது என்ற நம்பிக்கையால் அவர்கள் இங்கு வந்துள்ளனர். இவர்களை நாம் பாதுகாக்க வேண்டும்” என்று தம்மானந்த தேரர் அவர்களை கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து, இக்குடும்பங்களுக்கு உணவுக்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள் ஏற்பாடு செய்தனர். பசியை விட உயிரச்சம் இக்குடும்பங்களை வாட்டியது. எனினும் இத்தேரரின் அரவணைப்புதான் அங்கு மிகைத்தது.
வதுரகும்புர தம்மானந்த தேரர்
கண்டி திகனயில் உருவெடுத்த இனவாத வன்செயல் கண்டி மாவட்டம் முழுவதும் பரவ ஆரம்பித்த போது சிங்கள மக்கள் மத்தியில் பரந்து தெஹிகம , முறுத்தலாவ , குருகம பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அச்சமும் பீதியும் கிளம்பிற்று. இது எச்சந்தர்ப்பத்திலும் தமது வீடுகளுக்கும் மதஸ்தாபனங்களுக்கும் பரவும் என்றே பீதியாகும்.
இச்சந்தர்ப்பத்தில் நிலைவரத்தைப் புரிந்துகொண்ட நெல்லிகம பௌத்த மத்தியஸ்தானத்தின் ஸ்தாபகர் வதுரகும்புர தம்மானந்த தேரர், பௌத்த குருமார்கள் மற்றும் சில சிங்கள வாலிபர்களையும் இணைத்துக் கொண்டு நெல்லிகம பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக களத்தில் இறங்கினார்.
/
“வெளிப்பிரதேசத்தில் இருந்து திட்டமிட்ட குழுவொன்று இங்கு வந்து தாக்குதல்களில் ஈடுபடவுள்ளதாக எங்களுக்கு செய்தி கிடைத்தது. எனவே செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி முதல் மறுநாள் காலை வரை பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டோம்” என்று வதுரகும்புர தம்மானந்த தேரர் கூறுகிறார்.
“நான்கு சந்தர்ப்பங்களில் தாக்குதல்கள் மேற்கொள்ள இனவாதிகள் முற்பட்ட போது அவற்றை எம்மால் முறியடிக்க முடிந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் அவசரமாக பொலிஸாரை அழைத்தோம். அது மட்டுமன்றி அவர்கள் ஒன்று சேர்ந்திருந்த இடத்திற்குச் சென்று இந்த நாசகார செயலின் விளைவுகளை அவர்களுக்கு எடுத்துக்கூறி அந்தக் கூட்டத்தை கலைக்க முடிந்தது. ”
“நாம் பள்ளிவாசல்களுக்கு முன்பாகவும் பாதுகாப்பில் ஈடுபட்டோம். இக் கலகக்காரர்களின் நோக்கம் உடைமைகளை நாசப்படுத்துவதாகும். இப்பகுதியில் 14 அல்லது 15 பள்ளிவாசல்கள் உள்ளன. அவற்றைக் காப்பாற்ற எம்மால் முடிந்துள்ளது. பெரும்பான்மையினரின் பொறுப்பு சிறுபான்மையினரை பாதுகாப்பதாகும் என்பது எனது கருத்தாகும். இதனைச் செய்து காட்ட எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. பெற்றோல் குண்டுகள் மூலம் இரு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை வெற்றியளிக்கவில்லை”
“எமக்கு முதல் இருநாட்கள் அடிப்படைவாதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். ஆனால் வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் முஸ்லிம்கள் தொழுகை நடாத்துவதற்கு பாதுகாப்பு வழங்க பௌத்த தேரர்கள் முன்வந்தமை மகிழ்ச்சியைத் தருகின்றது”
பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் இத்தகைய மத மற்றும் இனவாத பிரச்சினைகளுக்குத் தற்காலிகமாக தீர்வு காண முடியுமாயினும் பௌத்த மற்றும் முஸ்லிம் தரப்புக்கள் முன்வந்து இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.” என்கிறார் வதுரகும்புர தம்மானந்த தேரர்.
மீவதுர வஜிரநாயக்க நாஹிமி
கண்டி மாவட்டத்தில் உடுநுவர தொகுதியில் அமைந்துள்ள மீவலதெனிய கிராமம் 135 முஸ்லிம்கள் வசிக்கும் குக்கிராமமாகும். இக்கிராமத்தில் நாலாபுறமும் பெரும்பான்மை மக்கள் செறிவாக வசிக்கின்றனர். இம்மக்கள் பெரும்பான்மை மக்களுடன் ஆரம்ப காலம் முதல் நல்லுறவுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இப்பின்னணியில் இப்பகுதி முஸ்லிம்களின் அச்சம், பீதி தொடர்பாக அறிந்து கொண்ட மீவலதெனிய பகுதி கபுராதெனிய டிகிரி போகஹகொட ஸ்ரீ சங்கராஜ பிரிவெனா விகாரையின் பிரதம தேரர் மீவதுர வஜிரநாயக்க நாஹிமி, மீவலதெனிய முஸ்லிம்களை விகாரைக்கு அழைத்தார்.
“நீங்கள் எதுவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு. நாம் மனித நேயத்தை விரும்புபவர்கள். இவ்விகாரையுடன் முஸ்லிம்கள் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளனர். இவ்விகாரையின் கிணற்றில் வெள்ளிக்கிழமை நாட்களில் சிங்களவர்களை குளிப்பதற்கு அனுமதிப்பதில்லை. ஏனெனில், இக்கிணற்றுக்கு முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமையில் பள்ளிவாசலுக்கு செல்ல குளிப்பதற்கு வருவதால் அவர்களுக்கு நீர் தேவை என்பதனாலாகும். எமது விகாரையின் பிக்குகளுக்கு மருந்து எடுப்பதற்கு நாம் வைத்தியசாலைக்கு செல்லும் பொது சஹீத் நானாவைத் தான் விகாரைக்கு பாதுகாப்புக்கு விட்டுச் செல்வோம்.
“நீங்கள் எதுவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு. நாம் மனித நேயத்தை விரும்புபவர்கள். இவ்விகாரையுடன் முஸ்லிம்கள் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளனர்.
எனவே எங்களுக்கும் உங்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு உண்டு. பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்ற நாங்கள் பாதுகாப்பு வழங்குகின்றோம்” என்று கூறி ஏற்பாடுகளை செய்தார். தேரர் ஏற்பாடு செய்து கொடுத்த பாதுகாப்பில் அன்று வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் அச்சமின்றி ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர்.
கலவரத்தின் அழிவுகள் பற்றி அதிகம் பேசும் இந்தக் கால கட்டத்தில் இவ்வாறான இன மத நல்லுறவுக்கு வித்திடும் கனிவான செய்திகளையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது நமது கடமை அல்லவா? வன்முறைகளால் உடைந்து போய்க் கிடக்கும் உள்ளங்களை இவ்வாறான நல்ல செய்திகள் மூலமாக ஒட்டச் செய்யலாமல்லவா?