விடுபட்ட பக்கத்தை மீண்டும் வாசிக்கும் உயர் தர வகுப்பு அம்மா
யுத்தம் அவர்களது குழந்தைப் பருவத்தையும் இளமைப் பருவத்தையும் இல்லாமலாக்கியது. இளமைப் பருவத்தின் மிகச் சிறந்த நாட்களையும் யுத்தத்திற்குப் பின்னரான திட்டமிடப்படாத சூழ்நிலை இல்லாமலாக்கியது. அவர்களுக்கு நடுத்தரப் வயதிலாவது விடிவு கிடைக்க வேண்டாமா? “நான் 2009ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சையெழுதி பல்கலைக்கழக அனுமதிக்கு சில புள்ளிகளே குறைவாகவிருந்தன. பரீட்சையெழுதும் காலத்தில் யுத்தம் தீவிரமாகவிருந்தது. அதனால் கல்வி கற்பதற்குத் தடையேற்பட்டது. அவ்வாறு ஏற்பட்ட நட்டம் காரணமாக எனக்குத் தொழிலொன்று இல்லை. தற்போது நான் மீண்டும் உயர்தரப் பரீட்சையெழுதுவதற்காக கல்வி கற்கின்றேன்” […]
யுத்தம் அவர்களது குழந்தைப் பருவத்தையும் இளமைப் பருவத்தையும் இல்லாமலாக்கியது. இளமைப் பருவத்தின் மிகச் சிறந்த நாட்களையும் யுத்தத்திற்குப் பின்னரான திட்டமிடப்படாத சூழ்நிலை இல்லாமலாக்கியது. அவர்களுக்கு நடுத்தரப் வயதிலாவது விடிவு கிடைக்க வேண்டாமா?
“நான் 2009ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சையெழுதி பல்கலைக்கழக அனுமதிக்கு சில புள்ளிகளே குறைவாகவிருந்தன. பரீட்சையெழுதும் காலத்தில் யுத்தம் தீவிரமாகவிருந்தது. அதனால் கல்வி கற்பதற்குத் தடையேற்பட்டது. அவ்வாறு ஏற்பட்ட நட்டம் காரணமாக எனக்குத் தொழிலொன்று இல்லை. தற்போது நான் மீண்டும் உயர்தரப் பரீட்சையெழுதுவதற்காக கல்வி கற்கின்றேன்” என்று யாழ்ப்பாண, நாவாந்துறை கிராமத்தில் வசிக்கும் இருபத்தாறு வயதையுடைய நிமலவிஜிதா கூறினாள்.
நாவாந்துறை மீனவக் கிராமத்திற்கு அருகிலுள்ள களப்பு, மீனவப் படகுகளினால் நிரம்பி வழிகின்றது. படகுத்துறையில் பகல் நேரத்தில் சிறுவர்கள் பட்டம் விடுகின்றார்கள். பகல் வெயிலின் சூட்டினைத் தணிப்பதற்காக கடலிற்குச் செல்லும் குழுவிலுள்ள ஆண்கள் தென்னைமரங்களின் நிழலுக்குக் கீழ் அமர்ந்திருந்து முடிவில்லாத கலந்துரையாடலில் ஈடுபடுகின்றார்கள். தகடுகளினால், தென்னோலையினால் மற்றும் அஸ்பெஸ்டஸ் துண்டுகளினால் வேயப்பட்ட வீடுகளின் உரிமை கடலுக்குரியதாகும். அதிலொரு வீட்டிலிருந்து, வாழ்வின் உரிமையைத் தேடும் ஒரேயொருவர் நிமலவிஜிதாவாக இருக்கலாம்.
விருப்பு வெறுப்புக்களில் மட்டும் அவள் ஏனையவர்களைவிட வேறுபடுவது அவள் கொஞ்சக் காலம் தலைநகர் கொழும்பிலே சிறிது உலாவியிருப்பதால் உலகம் பற்றி சிறிது அறிந்திருப்பதால் ஆகும். இதனால்தான், வடக்கில் இளமை வாழ்க்கைகளுக்கு அர்த்தம் தேடிச் சென்றபோது இந்த விசாரிப்புக்களுக்கு அவளைச் சந்தித்தேன். அவள் கொஞ்சம் சிங்களம், ஆங்கிலத்தை அறிந்திருந்தாள்.
கடலிலும் கரையிலும் கூலி வேலை
இன்னமும் மாணவியாகிய (பாடசாலை ஒன்றில்லாத) விஜிதாவிற்கு இப்பொழுது நான்கு வயதில் ஒரு மகன் இருக்கின்றான். கணவன் பெனடிக் நிர்மல தனக்குப் பிறப்புரிமையால் கிடைத்த தொழிலைச் செய்து வருகின்றான். கடலுக்குச் சென்றுவரும் ஒரு நாளைக்கு பெனடிக்கிற்கு சுமார் இரண்டாயிரம் ரூபா கிடைக்கும். இன்னமும் விரிவுபடுத்த முடியாத இந்தக் குடும்பத்தின் மாதாந்த உணவுச் செலவு மட்டும் மாதாந்தம் கிட்டத்தட்ட 15,000 ரூபாவென விஜிதா கணக்கிட்டுப் பார்த்திருக்கிறாள்.
மாதாந்தச் செலவு சுமார் ஐம்பதினாயிரம் ரூபாவாகும். ஆனால், சம்பாதிப்பது வெறுமனே இருபத்தையாயிரம் ரூபாவேயாகும். மீதியைக் கூலி வேலை செய்தே நிரப்புகின்றார்கள். அதை அவள் கொச்சைச் சிங்களத்தில் இவ்வாறு கூறுகின்றாள். “மாதாந்தப் பொருட்களை வாங்குவதற்கு பதினையாயிரம் வேண்டும். இப்போதென்றால் பிரச்சினையில்லை. இந்தக் காணி, வீடு எல்லாம் எங்களுக்கில்லை…நல்லதொரு காணியை வாங்க ஆசை…. அதற்காகத் தானே தொழிலொன்று எடுப்பதற்காகப் படிக்கின்றேன்.”
பெனடிக்கைப் போன்றே இக்கிராமத்திலிருந்து கடலிற்குச் செல்லும் எல்லோரும் கடலில் மீன் பிடிப்பது கூலிக்காகவாகும். அவர்கள் யாவரும் வாழ்க்கைக்காக எதிர்கால முதலீடொன்றையோ உல்லாசப் பயணமொன்றையோ மேற்கொள்வதில்லை.
அங்கு சந்தித்த ராசைய்யா நல்லதரன் சாராயம் காய்ச்சுபவர் ஆவார். அறுபத்து நாலு வயதை அண்மிக்கும் அவர் இதுவரை கொழும்புக்குச் சென்றதில்லை. ஏனைய இளவதினரினது வாழ்க்கையும் இதற்கு மாறுபட்டதல்ல.
விஜிதாவின் கனவுகளுள் பிள்ளையை நகர்ப்புறப் பாடசாலையொன்றிற்கு அனுப்புதல், தொழில் எடுத்தல் மற்றும் காணியொன்றை வாங்குதல் என்பனவாகும். இதற்காக, மீனவத் தொழில் மற்றும் அரசாங்கத் தொழில் தவிர்ந்த வேறெந்த ஜீவனோபாய மாற்றுவழிகளும் அவர்களுக்குத் தெரியாது.
இதற்குக் காரணம் களப்பினை அண்டிய பகுதிகளில் சுயதொழில் மற்றும் தொழிற்சாலை நிகழ்ச்சிகள் எதுவுமே காணப்படாமையாகும். அதுபோன்றே, கைத்தொழில்கள் காணப்படும் இடங்களுக்கு இவர்கள் செல்லாமையும் ஆகும். இதனால் ஏற்பட்டுள்ள வேலையின்மை யாழ். குடாநாடு பூராகவும் பரவியுள்ளது. பலாலிப் பிரதேசத்திற்கு அப்பால் மீள்குடியேற்றம் நடைபெறும் வளாலாய்க் கிராமத்திலும் இவர்களைப் போன்ற பலரைச் சந்தித்தேன்.
நாளொன்றுக்கு ரூபா. 165
அக்கிராமத்தில் சுதாஜினி (30) வேலை செய்வது நிர்மாணத்துறைத் தொழிற்சாலை ஒன்றிலாகும். அவளது நாள் சம்பளம் ரூபா. 165 என அவளே கூறினாள். நிலமை இவ்வாறிருப்பதால், தனியார்துறை நிறுவனங்களில் தொழில் செய்வது பற்றி இந்த இளைஞர்கள் சிந்திப்பதில்லை.
“எனது கணவர் மீன்பிடிக்கப் போவார். எனக்குத் தொழிலில்லை. தொழில் எடுப்பதற்குப் பாடசாலைக்குச் சென்றது போதாது. சுமார் இருபது வருடங்கள் அகதி முகாம்களில் வாழ்ந்தேன். ஆறு பாடசாலைகளுக்குச் சென்றிருக்கின்றேன். அத்தகைய கடந்த காலத்தினால்தான் இப்போது இப்படிச் எதுவும் செய்யமால் இருக்கிறேன்” என்று கூறினாள் புஷ்பராணி. அவளுக்கும் முப்பது வயதாகின்றது.
இந்தக் கிராமத்தில் பலரது குடும்பத்தவர்கள் கிபீர் தாக்குதல், புலிகள் இயக்கத்தினால் கடத்தப்படுதல் அல்லது யுத்தத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்துள்ளனர். பலாலிப் பிரதேசத்தில் காணப்படும் மேலும் மூன்று அகதி முகாம்களிலுமே இளவயது வாழ்க்கையை எதுவுமேயின்றித் தொலைத்த பலரது வாழ்க்கையைக் காணக் கிடைத்தது. சில இளவயதினரது வாழ்க்கை வேலையின்மை காரணமாகவே மூப்படைந்திருந்தது.
‘பொதுவான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம்’
வேலையின்மை நாட்டிலுள்ள பொதுவான பிரச்சினையாகும். ஆனால், அது பற்றிப் பொதுவான கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டாமென யாழ்;ப்பாணத்திலுள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
யுத்தம் நடைபெற்ற இருபத்தாறு வருட காலப்பகுதியில் இழைக்கப்பட்ட அநீதிகள் காரணமாக இவ்விளைஞர்களின் வாழ்க்கைக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை ஆரம்ப முதல் சிந்தித்துப் பார்த்து அவர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டுமென அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் தலைவரான ……….. கூறுகின்றார்.
அதற்காகப் பொதுமக்களுக்குத் துரிதமாகக் காணி உரிமைகளை வழங்குதல், சுயதொழில் நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தல் மற்றும் சுயதொழில் பயிற்சி போன்ற பல முன்மொழிவுகளை அவர் கூறுகின்றார். இது தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அலுவலக அலுவலர்களிடம் பேசியபோது, அவர்கள் ஆரம்பத்தில் பனை சார்ந்த, இறால் பண்ணை சார்ந்த மற்றும் பிளாஸ்டிக் போன்ற பல கைத்தொழில்கள் நிகழ்ச்சிகள் காணப்பட்ட போதிலும் தற்போது அவ்வாறானவை இல்லையெனக் கூறினார்கள்.
யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் ஆகின்றன. வட மாகாண மக்கள் பல்வேறு சக்திகளினூடாக நாட்டிற்கு, உலகிற்கு வழங்கும் செய்திகளினுள் மறைந்திருக்கும் விஜிதாக்கள் புஷ்பராணிகளினது கதைகளை அந்த நேரத்திலே மூடிமறைப்பது பாராதுர்ரமான குற்றமாகும்: அநீதியாகும்.
“நான் பொரளையிலுள்ள உறவினர் வீட்டில் மூன்று வருடங்கள் இருந்தேன். அங்கு தொழிலுள்ளது. திருமணம் முடிப்பதற்கு இங்கு வந்தேன். கற்பதில் ஆர்வமாக இருக்கின்றேன். இல்லாவிட்டால், இந்தக் குழந்தையும் கடலுக்கே செல்ல வேண்டி வரும்” என விஜிதா கூறினாள். நாவாந்துறைப் பனைமரங்களுக்கிடையே அந்தக் குரல் எதிரொலிக்கின்றது. விடை வெகுதூரத்திலிருந்து வரவேண்டியுள்ளது.