இயந்திரங்களின் பிடியில் சிக்கிய மனிதர்கள்
ஆதம்பாவா: எதிர்காலத்தைத் தொலைத்தவன்
பார்ப்பதற்கு ஒல்லியாக நெடிந்து வளர்ந்துள்ளார் ஆதம்பாவா. பச்சை பசேல் என்று பரந்திருக்கும் வல்களை ஏக்கத்துடன் பார்க்கிறார். பூரிப்புடன் வளர்ந்து வரும் நெற்பயிரை வாஞ்சையுடன் தொட்டுத் தடவிய பின்னர் கையை தன் மூக்கின் நுனியில் வைத்து நுகர்கிறார். மூச்சை நன்கு உள்ளே இழுத்துவிட்டு நுகர்கிறார். நாசியினுள் ஏறும் அந்தப் பச்சைய மணம் ஆதம்பாவின் அழகான கடந்த காலத்தை அவருக்குள் மீட்டெடுக்கிறது. அந்த மணத்தை ஆழ்ந்து அனுபவிக்கிறார். ஒரு காலத்தில் இந்தப் பயிர்கள் எல்லாம் அவரது வருகைக்காகக் காத்திருந்த ஒரு […]
பார்ப்பதற்கு ஒல்லியாக நெடிந்து வளர்ந்துள்ளார் ஆதம்பாவா. பச்சை பசேல் என்று பரந்திருக்கும் வல்களை ஏக்கத்துடன் பார்க்கிறார். பூரிப்புடன் வளர்ந்து வரும் நெற்பயிரை வாஞ்சையுடன் தொட்டுத் தடவிய பின்னர் கையை தன் மூக்கின் நுனியில் வைத்து நுகர்கிறார். மூச்சை நன்கு உள்ளே இழுத்துவிட்டு நுகர்கிறார். நாசியினுள் ஏறும் அந்தப் பச்சைய மணம் ஆதம்பாவின் அழகான கடந்த காலத்தை அவருக்குள் மீட்டெடுக்கிறது. அந்த மணத்தை ஆழ்ந்து அனுபவிக்கிறார்.
ஒரு காலத்தில் இந்தப் பயிர்கள் எல்லாம் அவரது வருகைக்காகக் காத்திருந்த ஒரு காலம் உண்டு. இப்போது அப்படியில்லை. அவரும் அவரது கூட்டாளிகளும் ஓவ்வொழிச்சல் இன்றி வேலை பார்த்த வயல்களை இயந்திரங்கள் ஆக்கிரமித்துக்கொண்டு அவர்களைத் துரத்தியடித்துவிட்டன. போர் ஓய்ந்தது பலருக்கு நம்மையயனில் ஆதம்பாவா போன்றவர்களுக்கு அதுவே எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டது. போரின் முடிவு இயந்திரங்களின் ஆக்கிரமிப்புக்களை வயல்களில் வேகப்படுத்திவிட்டது. அதிக லாபம் பார்ப்பதற்காக அதிகாரிகளும்கூட இயந்திரங்களைத்தான் இப்போது பரிந்துரைக்கிறார்கள்.
“ஒரு நேரப் பசியைப் போக்கவே படாதபாடு படவேண்டியுள்ளது. கடல் மீன்பிடித் தொழில் கூட தூர்ந்த நிலைதான். என்ன செய்வது சில்லறைக் கடையயான்றில் பொருள்கள் தூக்கி இறக்கும் கூலிக்குப் போகிறேன். என்ன செய்வது வயிற்றை நிரப்ப ஏதாவது ஒரு சிறு வருமானமாவது வேண்டும்தானே!” ஆதம்பாவா ஆதங்கப்படுகிறார். அவருக்கு இப்போது 65 வயது. நிந்தரவூரைச் சேர்ந்தவர்.
கிழக்கிலங்கையில் முக்கியமான மாவட்டம் அம்பாறை. தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் என மூவின மக்களும் ஒன்றிணைந்து வாழ்கிற இடம். இங்குள்ள மக்களின் முக்கிய வாழ்வாதாரத் தொழில்கள் விவசாயமும், மீன் பிடியும்தான்.
கல்லோயா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்ப்பாசன வசதி காரணமாக இந்த மாவட்டத்தில் நெற்செய்கை பெருமெடுப்பில் மேற்கொள்ளப்படுகிறது. இலங்கையின் நெல் உற்பத்தியில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் அளவுக்குப் பெருமெடுப்பிலா உற்பத்தி.
சிறுபோகச் செய்கை இங்கு 54 ஆயிரம் யஹக்ரேயர் (ஒரு யஹக்ரேயர் 2 அரை ஏக்கர் அளவு) காணியிலும் பெரும்போக நெற்செய்கை சுமார் 67 ஆயிரம் யஹக்ரேயர் காணியிலும் மேற்கொள்ளப்படுகிறது.
ஆரம்பகால கட்டங்களில் இந்த நெல் விவசாயச் செய்கைக்கு மனித சக்தியே கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டதெனினும், காலப்போக்கில் இயந்திரங்களின் பாவனையும் ஆக்கிரமித்து கொண்டுள்ளது. இதனால் விவசாயக் கூலிகள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அறுவடைத் தொழிலாளர்களின் (அரிவு வெட்டுவோர்) வாழ்க்கை கிட்டத்தட்ட அப்படியே முடிவுக்கு வந்துவிட்டது. இயந்திரங்கள் அவர்களின் தொழிலைப் பிடுங்கிக் கொண்டன. இப்போது அவர்கள் நாளாந்தச் சாப்பாட்டுக்கு வேறு தொழில்தேடி இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ், முஸ்லிம் அறுவடைத் தொழிலாளர்கள் இந்தக் கூலியை நம்பியே வாழ்ந்தவர்கள். ஆனால் இப்போது அவர்களின் எதிர்காலம் நிச்சயமில்லாததாகிவிட்டது. இவர்களது குடும்பங்கள் கிட்டதட்ட நடுத்தெருவுக்கு வந்துவிட்டன. இந்த மனிதர்களைத் தேடுவார் எவரும் இல்லை இப்போது.
அவர்கள் நடைபயின்ற வயல்களின் சேற்று நிலங்களில், அறுவடைசெய்த அடுத்த கணமே நெல்மணிகளை வெளியேற்றும் இயந்திரங்கள்தான் உறுமியபடி திரிகின்றன.
“நெல்விவசாய அறுவடைத் தொழிலை நம்பியேதான் வாழ்ந்து பழகிவிட்டோம். என்னைப்போல ஆயிரக்கணக்கானவர்களுக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விட்டது. முன்னர் என்றால், தொழிலாளர்கள் 15 பேர், 20 பேர் சேர்ந்து ஒரு குழுவாக அறுவடைக் காணிகளைப் போடிமாரிடம் பேசி பெற்றுக்கொண்டு அறுவடை செய்வோம். ஒரு ஏக்கரில் அறுவடை செய்ய 4,500 ரூபா முதல் 5,000 ரூபா வரை கூலி. அறுவடைக் காலம் ஆரம்பித்தால் சுமார் இருமாதங்கள் வரை தினமும் தொழிலும்தான் வருமானமும்தான்.”
ஆதம்பாவானி அற்புதமான நாள்கள் அவை. அதைப் பற்றிப் பேசும்போதே அவரது முகத்தில் மலர்ச்சி மீண்டும் அப்பிக்கொள்கிறது. தன்னுடைய துன்பங்களை மறந்து பழைய நினைவுகளில் லயிக்கிறார்.
“அறுவடையின் பின் சூடு மிதிப்பு வேலையுகூடக் கிடைக்கும். காசா இல்லாமல் நெல்லாகக் கூலி பெற்று சேமிப்போம். வருடம் முழுவதும் சாப்பாட்டுக்கு அந்த நெல்லே போதும்.”
ஆதம்பாவாவின் முகம் இருள்கிறது. உடல்களைக் குறுக்கிக்கொள்கிறார். வயல் வரம்பில் தன்னுடைய இரு கால்களையும் உள்ளிழுத்துக்கொண்டு கைகளால் அவற்றை இறுக்கிக் கொள்கிறார்.
“இன்று நிலமை மாறிவிட்டது. எல்லாவற்றுக்கும் இயந்திரங்கள்தான். எங்களைத் தேடுவார் கிடையாது. எங்களுக்குத்தான் வயிற்றில் பெரும் அடி. வருமானமும் இல்லை. ஒரு நேர பசியைப் போக்கவே படாதபாடு பட வேண்டியுள்ளது. நான் மட்டுமல்ல என்னைபோல அறுவடைத் தொழிலை நம்பிய ஆயிரக்கணக்கானவர்களுக்கு இதுதான் கதி.”
இலங்கையில் உள்நாட்டுப் போர் ஆரம்பிப்பதற்கு முன்னரான காலப் பகுதிதான் ஆதம்பாவா போன்றவர்களுக்குப் பொன்னான காலம். அப்போது அவர்களுக்கு பரந்துவிரிந்த வாய்ப்பு இருந்தது. அம்பாறையில் மட்டுமல்ல, மாவட்டங்கள் கடந்து வடக்கே கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் அவர்கள் பயணித்தார்கள்.
“போருக்கு முன்னம் அரிவு வெட்டுக்கு பரந்தன், கிளிநொச்சி, 3 ஆம் வாய்க்கால், 7ஆம் வாய்க்கால், கண்டாவளை, முரசு மோட்டைக்கு எல்லாம் போயிருக்கிறம். தங்கியிருந்து தொழில் செய்வம். மட்டக்களப்பிலிருந்து ரயில் எடுத்துப் போவம். குதூகலமான பயணமாய் இருக்கும். அதுகள் மறக்கேலாத நாள்கள்.”
ஆனால், ஆதம்பாவாக்களை வயல் சொந்தக்காரர்களும் விவசாயத்துறை அதிகாரிகளும் இப்போது மறந்துவிட்டார்கள். இந்த அவசர யுகத்தில் அவர்கள் இயந்திரங்களின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். வயல்கரையில் இருந்து ஆதம்பாவா எழுந்திருக்கையில் அவரது கண்ணில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் பெருகி வயலில் விழுகிறது. தேங்கி நிற்கும் தண்ணீரில் அது கரைந்போகிறது. ஆதம்பாவா ஏக்கத்துடன் வீடு நோக்கித் திரும்பி நடக்கிறார்.