உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர்...
கடுவாப்பிடியில் நடப்பது இதுதான்!!
எனக்கு இரண்டு குடும்பங்கள் கையளிக்கப்பட்டன. தாயார் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதோடு தந்தை மூன்று வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். மூத்த பிள்ளை 16 வயதிலும் இரண்டாவது பிள்ளை 08 வயதிலும் உள்ளவாகள். இந்தக் குழந்தைகள் அவர்களது பாட்டனிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர். ஆனால்….
நீர்கொழும்பு கடுவாபிடிய தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று மாதங்களின் பின்…
மக்கள் முகம் கொடுத்த எல்லா விதமான நடைமுறைக்கு மாறான அனுபவங்களில் இருந்து மீள்வதற்கு எவ்வாறு முயற்சி செய்கின்றார்கள் என்பது முக்கியமானதாகும். இரவு பகல் என்று பாராமல் கடுவாப்பிடியவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் துரிதகதியில் இல்லாவிட்டாலும் தொடர்கின்றன.
கடுவாபிடிய மக்கள் மத்தியில் மத ரீதியான உணர்வலைகளை ஊக்குவிப்பதில் பிரதானமான வராக ஆயர் சஷ்மி மதுசங்க கடைமையாற்றுகின்றார். இந்த செயற்பாடுகளின் பின்னால் அதிகளவிலான மக்கள் உள்ளனர். அவர்களில் ஒருதரப்பினர் கத்தோலிக்க ஆயர்களாவர். அதற்கு மேலதிகமாக குறிப்பாக நிறுவன ரீதியான நடவடிக்கைகள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், பொதுத் துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியோர் கடுவாபிடிய மக்கள் பௌதீக மற்றும் உள ரீதியாக மீட்டெடுக்கச் செய்வதற்கான முயற்சிகளை செய்து வருகின்றவர்களில் அடங்குகின்றனர்.
“எனக்கு இரண்டு குடும்பங்கள் கையளிக்கப்பட்டன. தாயார் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதோடு தந்தை மூன்று வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். மூத்த பிள்ளை 16 வயதிலும் இரண்டாவது பிள்ளை 08 வயதிலும் உள்ளவாகள். இந்தக் குழந்தைகள் அவர்களது பாட்டனிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் நோயாளிகள்.
மற்றைய குடும்பத்தில் தந்தை குண்டு வெடிப்பில் கொல்லப்பட தாய் இரண்டு குழந்தைகளுடன் இருக்கிறார். முதலாவது குழந்தைக்கு 10 வயது. இரண்டாவது குழந்தைக்கு 5 வயது. முதல் குடும்பத்தை விட இந்தக் குடும்பத்தின் நிலை சற்று திருப்திகரமானதாக இருக்கின்றது. ஏனெனில் இந்தக் குடும்பத்தில் தாய் உயிருடன் இருக்கின்றார். மொத்தமாக இந்த இரண்டு குடும்பங்களும் கஷ்டத்தை எதிர் நோக்குகின்றன. இந்த இரண்டு குடும்பங்களுக்கு மேலதிகமாக நான் மேலும் 07 குடும்பங்களைக் கவனித்து வருகின்றேன்.” என்று கூறகிறார் ஆயர் ரஷ்மி பெர்னாண்டோ.
இந்தக் குழந்தைகளின் நிலை பற்றி வைத்தியர் திமுத் பொன்வீர இப்படிக் கூறுகிறார். “இவர்களை மகிழ்விப்பதற்காக கடந்த வாரம் குழந்தைகளை ஒரு இராப்போசன விருந்துக்கு அழைத்துச் சென்றதோடு மற்றுமொரு தினத்தில் அவர்களை நீர் விளையாட்டுக்கு(‘லெசர் வேர்ல்ட்டுக்கு’) அழைத்துச் சென்றோம். இந்தக் குழந்தைகளின் வீடுகளுக்கு ஒவ்வொரு நாளும் நாம் சென்று என்ன தேவைகள் இருக்கின்றன என்று நலன் விசாரித்து அவர்களை கவனித்து வருகின்றோம்.” என்கிறார். குண்டு தாக்குதலின் பின்னரான மருத்துவ உதவிகளைச் செய்து வரும் மருத்துவர்களில் பொன்வீரவும் ஒருவராவார். அத்துடன் அவர் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் தங்கி இருப்பதை விட்டுவிட்டு; தாக்குதல் இடம்பெற்றவுடன் அந்த பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு மக்களை பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். தொண்டர் சேவை அடிப்படையில் உதவும் பணிகளில் ஈடுபட்டதோடு நிவாரண நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்யும் ஒருவராக மாறினார். அவரது பெறுமதியான சேவை கடுவாபிடிய மக்களுக்கு தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
குண்டு தாக்குதலால் சேதமடைந்த கட்டிடங்களை திருத்தி அமைக்கும் பணிகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் உடைந்து போன உள்ளங்களை அவ்வளவு இலகுவாக திருத்தி அமைத்துவிட முடியாது. அது நீண்ட காலம் செல்லக்கூடிய பிரச்சினையாகும். “இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்தமான குறிக்கோள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளங்களை மீண்டும் வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதாகும். பாதிக்கப்படும் வகையிலான பேச்சுக்களை இங்கு நாம் அனுமதிப்பதில்லை. அத்துடன் எங்களிடம் மிகவும் அனுபவம் வாய்ந்த உளவள ஆலோசகர்கள் மற்றும் வைத்தியர்கள் உள்ளனர்” என்று திமுத் பொன்வீர கூறினார்.
இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உளவள மற்றும் மருத்துவ சேவைகளை வழங்குவதில் பிரதான பாத்திரம் ஏற்று செயற்படும் வைத்தியர் ரொசான் பெரேரா என்பவர் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியின் நரம்பியல் பிரிவுக்கு பொறுப்பான டாக்ராவர். அவரது கருத்தின்படி பாதிக்கப்பட்டவர்களில் அனேகர் உளநல சிகிச்சை செல்வதற்கு விரும்புவதில்லை. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அந்தப் பகுதியில் (GMOA) பாதிக்கப்பட்ட மக்களுக்கான பௌதீக மற்றும் உளவள சிகிச்சை வழங்கும் சேவையை இலவசமாக வழங்கி வருகின்றது.
ஆழமான காயமாக இருந்தாலும் சரியான சிகிச்சை மூலம் இலகுவாக விரைவாக குணப்படுத்தி விடலாம். எவ்வாறாயினும் காயங்களுக்கு நாங்கள் உரிய மருந்துகளை கொடுக்கின்றோம். ஆனால் அடையாளம் காண முடியாத காயங்களானது வெளித் தெரியும் காயங்களை விட ஆபத்தானவைகளாகும். அத்தகைய மக்களுக்கான நல சிகிச்சை வழங்குவதற்காக டாக்டர்கள் என்ற முறையில் நாங்களும் தேவாலயத்துடன் இணைந்துள்ளோம். கடந்த மூன்று மாதங்களாக உள ரீதியாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் படிப்படியாக தேறி வருவதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். கடுவாபிடியவில் மக்கள் அடையும் விரைவான சுகத்தின் இரகசியம் அவர்களை மீண்டும் ஒன்றிணைத்ததேயாகும். நல்ல மனிதர்கள் பௌத்தர்கள், முஸ்லிம்கள், கிரிஸ்தவர்கள், இந்துக்கள் என்று எல்லா இனத்துக்குள்ளும் இருக்கின்றார்கள்” என்று டாக்டர் ரொசான் பெரேரா கூறுகின்றார்.
கடுவாபிடியை முன்னேற்றுதல்
கடுவாபிடிய பகுதியை மீளக்கட்டியெழுப்புவதில் ‘செத்சரண’ அமைப்பு மிகவும் முக்கியமான பங்களிப்பை செய்து வருகின்றது. மஹேன் குணவர்தன, ஆயர் லோரன்ஸ் பேரேராவின் பணிப்புரைக்கமைய மூன்று மாதங்களாக மிகவும் அர்ப்பணிப்புடன் மிகவும் முக்கியமான பணியை இந்த திட்டம் மூலம் செய்து வருகின்றார். குணவர்தனவின் கருத்துப்படி அப்பகுதியைச் சேர்ந்த 75 குடம்பங்களில் 115 பேர் அளவில் கடுவாபிடிய குண்டு தாக்குதலால் உயிரிழந்துள்ளனர்.250 பேர் அளவில் காயமடைந்துள்ளனர். மரணமடைந்த மற்றும் காயமடைந்தவர்கள் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 140 குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உள்ளனர். இருப்பிடங்களை இழந்தவர்கள் இந்த குடும்பங்களில் உள்ளனர். எமது திட்டத்தின் கீழ் குழந்தைகளின் கல்விக்கு முன்னுரிமை கொடுப்பது பிரதான இலக்காககும். ஓவ்வொரு குழந்தையினதும் கல்விச் செலவுகளுக்காக மாதாந்தம் ரூபா 5000 வழங்குகின்றோம். குழந்தைகள் அவர்களது உயர் கல்வியைப் பூர்த்தி செய்யும் வரையில் இத்திட்டம் தொடரும். இக் குழந்தைகளது அறிவை மேம்படுத்தி அதிகரிக்கச் செய்வதற்காக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து விரிவுரையாளர்களையும் மாணவர்களையும் வரவழைத்து பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக பரீட்சைக் காலங்களில் க.பொ.த. (சா/த) மற்றும் உயர்தரப் பாடங்களை உள்ளடக்கியதாக கருத்தரங்குகளை நடத்தினோம்.
குண்டுத் தாக்குதலால் காயமடைந்தவர்களுக்கான எல்லாச் செலவுகளையும் நாம் பொறுப்பேற்றுள்ளோம். அத்தகையவர்களின் குடும்பங்களை பராமரிக்கவும் நாம் உதவிகளைச் செய்து வருகின்றோம். மாதத்தில் முதல் வாரம் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இலவச மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்து வருவதாகவும் குணவர்தன கூறினார்.
“எனது பிரதான நோக்கம் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களது பிரதான பிரச்சினைகளை மதிப்பிட்டு அவற்றை மூன்று வகையாக வகைப்படுத்தவதாகும். அதன் பின்னர் அவர்களுக்கு உதவி செய்யும் திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பது. கல்வியானது முன்னுரிமை. அதற்கடுத்ததாக குடியிருப் புக்காக வீடமைப்புத் திட்டம், சுகாதாரம் மற்றும் தன்னிறைவடையக்கூடிய வருமான வழியை ஏற்படுத்துவது என்பன ஏனைய திட்டங்களாகும். இந்த 140 குழந்தைகளில் மிகவும் வயது குறைந்த குழந்தையாக 03 வயதுக் குழந்தையொன்று இருக்கின்றது. பாதிப்புக்குள்ளாகியுள்ள இந்தக் குழந்தைகளுக்கு உதவுவதற்காக அவர்களது 18 வயது பூர்தியடையும் வரையில் நாம் இத் திட்டத்தை முன்னெடுப்போம்” என்று ஆயர் மஞ்சுள நிரோசன் பெர்னாண்டோ தெரிவித்தார். இவர்தான் இத்திட்டங்களுக்குப் பொறுப்பாக உள்ளவர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்காக அரசாங்கத்தின் உதவியுடன் கிறிஸ்தவ தேவாலயம் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. காணி உள்ளவர்களுக்கு அவர்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ஆயர் மஞ்சுள நிரோசன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.
அதேநேரம் நாம் காணி இல்லாதவர்களுக்காக காணியை பொருத்தமான இடத்தில் அடையாளம் கண்டு பணம் கொடுத்து வாங்க வேண்டி இருக்கின்றது. அந்தக் காணியில் 15 வீடுகளை நிர்மாணிக்க முடியும். காயப்பட்டவர்களில் வீடில்லாதவர்களாக 24 குடும்பங்கள் உள்ளன. மீதி 09 குடும்பங்களுக்கும் வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்காக விரைவில் நாம் நடவடிக்கைகளை எடுப்போம்” என்று ஆயர் மஞ்சுள நிரோசன் பெர்னாண்டோ கூறினார்.
ஏப்ரில் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 352 குடும்பங்களின் நலன்களுக்காக பேராயரின் நிதியத்தில் இருந்து 700 மில்லியன் (70 கோடி) ரூபாய்கள் செலவிடப்பட்டிருப்பதாக கிறிஸ்தவ தேவாலயம் அறிவித்திருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.